Published : 27 Sep 2014 12:37 PM
Last Updated : 27 Sep 2014 12:37 PM

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எல்லோருக்கும் வாழ்க்கையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருக்கும். அதற்குப் பெரும்பாலானவர்கள் வீட்டுக் கடனையே நம்பியிருப்பார்கள். அது குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துகொண்டே இருக்கும். அவற்றில் சில பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்களும்:

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்), தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி), விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல், கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்) ஆகிய ஆவணங்களுடனும் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தையும் அளிக்க வேண்டும்.

நமக்கான வீட்டுக் கடன் வாங்குவதற்கான தகுதியை வங்கி எப்படித் தீர்மானிக்கும்?

திருப்பிச் செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும். அதாவது உங்கள் மாதந்த்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக, மிஞ்சும் பணத்தை வைத்தே உங்களால் எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் கணக்கிடும். கணவன், மனைவி இருவரும் பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் வீட்டுக் கடன் தகுதி அதிகமாக இருக்கும்.

மாறும் வீட்டுக் கடன் வட்டி விகிதம் (Floating Rate Home Loans) என்றால் என்ன?

ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவது அல்லது குறைக்கப்படுவதைப் பொறுத்து மாறும் தன்மை உடையது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முழு காலத்துக்கும் ஒரே அளவு மாதத் தவணை (இ.எம்.ஐ.) இருக்காது.

அவ்வப்போது சில நூறு ரூபாய்கள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இந்த ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியுமானால் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்யலாம். இந்த விவரங்கள் கடன் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கடன் வழங்கும் காலத்தில் உள்ள வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பொருந்தும்.

வட்டி விகிதங்கள் மாறும்போது வங்கி அதைத் தெரிவிக்குமா?

வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தால் வங்கி உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நிலையான வட்டி விகிதம் (Fixed Rate Home Loan) என்றால் என்ன?

கடன் காலம் முழுமைக்குமான வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். இது நீங்கள் வாங்கியிருக்கும் கடனின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. நீங்கள் கடன் பெறும் சமயத்தில் வட்டி விகிதம் குறைவானதாக இருந்தால் இம்முறை உபயோகமானதாக இருக்கும். எதிர்காலத்தில் சந்தையில் வட்டி விகிதம் அதிகரித்தாலும் உங்கள் கடன் மீதான வட்டி விகிதம் நிலையாக இருக்கும்.

எல்லா மாதமும் குறையும் முறையில் (Reducing Balances Method) வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

உங்கள் மாதத் தவணையின் ஒரு பகுதி கடன் முதலில் இருந்து கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட முதல் மீதே அடுத்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. குறிப்பிட காலம் கடன் மீதான தவணைகள் செலுத்தப்பட்ட பின் தவணையில் வட்டிப்பகுதி குறைந்து முதல் பகுதி அதிகரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x