Last Updated : 12 Sep, 2013 04:07 PM

 

Published : 12 Sep 2013 04:07 PM
Last Updated : 12 Sep 2013 04:07 PM

மாணவன் எனும் மூலதனம்

பள்ளியில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், உணவைப் பகிர்ந்துண்ணவும், மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், அடுத்த செஷனுக்கு மனதை தயார் செய்வதற்கேற்ற வகையிலும்தான் கால அட்டவணையில் உணவு இடைவேளைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையான பள்ளிகளில் அது ஆசிரியர்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.

60 நிமிட இடைவெளியை வெறும் 10 அல்லது 20 நிமிட இடைவேளையாக அவரவர் விருப்பத்துக்கு குறைக்கப்பட்டு, களவாடியபொழுதுகளில் திறமையான (மற்ற ஆசிரியருடன் போராடி வெற்றிபெறும் வல்லமை பொருந்தியவர் அல்லது தானே சிறந்த ஆசிரியர் என்று உணருபவர்) ஆசிரியர்கள் சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை மிகச்சிறந்த மதிப்பெண் உற்பத்தி எந்திரங்களாக உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவர்.

பிள்ளைகள் உணவை அவசர அவசரமாக உண்டுவிட்டு ஓடுவர். மற்றவருடன் பேசவும் நேரம் இருப்பதில்லை; நன்கு படிக்கும் மாணவர்களிடம் இடைவேளையின்போது சந்தேகங்களைக் கேட்டுத் தெளியவும் நேரமிருப்பதில்லை. மகிழ்ச்சியாக விளையாடி மகிழவும் நேரமிருப்பதில்லை என்று மாணவர்கள் சில ஆசிரியர்களிடம் புலம்புவர். வீட்டுக்கு சென்று மதிய உணவு உண்ணும் மாணவர்களின் நிலைமை இன்னும் பரிதாபத்துக்கு உரியது. சாப்பிட்டால் நேரமாகிவிடுகிறது என்று சிலர் சாப்பிடாமல் பாக்ஸில் போட்டு எடுத்து வந்து இரண்டாம் பாடவேலையின்போது சாப்பிடுவர். வேறு சில மாணவர்கள் அவசர அவசரமாக அள்ளிபோட்டுக்கொண்டு ஓடிவருவர்.

மதிய நேர தேர்வுகளை அட்டெண்ட் பண்ணவில்லை என்றால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதால், சில மாணவர்கள் வீட்டுக்கு போகவும் பயந்து சாப்பிடாமலேயே இருந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நீதி நெறி கல்விக்கு என ஒதுக்கபட்டிருக்கும் பாடவேளைகளையும்கூட இவர்கள் பிடுங்கிக்கொள்வது கொடுமை எனில், மாணவர்கள் பயமின்றி தங்கள் உடலும் உள்ளமும் ஒன்றிணைந்து செயல்படும் ஓவியம், உடற்கல்வி ஆகிய பாடவேளைகளையும்கூட '10 ஆம் வகுப்புக்கு என்ன இதெல்லாம் வேண்டியிருக்கு' என்று பாட ஆசிரியர்கள் அதையும் பிடுங்கிக்கொள்வது கொடுமையிலும் கொடுமை!

அனைத்து ஆசிரியர்களும் மனித உளவியல், குழந்தைகள் உளவியல் என பலவிதமாகப் படித்துவிட்டுதான் வருகின்றனர். பிறகு ஏன் அவர்கள் மாணவர்களின் நிலையிலிருந்து பார்க்க தவறிவிடுகின்றனர்?

கல்வியாளர்கள் பல காலமாய் போராடி குழந்தை மையக்கல்வியை வகுப்பறைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசின் பல்வேறு கல்விக்கொள்கைகளும் காலத்துக்கேற்ப மாறுதல்களை உள்வாங்கி குழந்தைகள் மகிழ்வுடன் பள்ளிக்கு வர வழி செய்துள்ளன. அரசு பல நூறு கோடிகளை கல்விக்கென்று ஆண்டுதோறும் செலவழிக்கிறது. அது ஒரு தனி மனிதன் மீது அரசு செய்யும் மூலதனம். அவன் மீண்டும் அதை நாட்டுக்கு எந்த வகையிலாவது திரும்ப செலுத்தும்போது மட்டுமே அவன் நாட்டின் வளமாக கருதப்படுகிறான். இல்லையெனில், அவன் மீது செய்யப்பட்ட செலவு வீணாகிறது. அதனால்தான் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் (1776)கல்வியறிவு பெற்ற மனிதனை விலையுயர்ந்த எந்திரத்துக்கு ஒப்பிடுகிறார்.

கல்விக்காக நம் நாட்டில் எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வியின் மூலமே நல்ல குடிமக்களை உருவாக்க இயலும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், கல்வி என்பது என்ன என்பதைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்களிடம் இல்லாமல் போனதுவே சோகம்.

கல்வியறிவு பெற்ற மனிதன நாட்டுக்கு தக்க விதத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறான். நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டுபவனாகவும், சக உயிரினங்களை மதித்துத் தனக்கு சமமாய் நடத்துபவனாகவும், எளிய உயிரினங்களை அரவணைப்பவனாகவும், நல்ல நீதிநெறிகளை பின்பற்றுபவனாகவும் பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் திறன் மிக்கவனாகவும், கல்வியை சுய முன்னேற்றத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துபவனாகவும் இன்னும் பல குணநலன்களைக் கொண்டவனாகவும் எதிர்ப்பர்க்கப்படுகிறான்.

இப்படிப்பட்ட மனிதனைதான் பொருளாதார வல்லுனர்கள் Human Capital என்று வர்ணிக்கின்றனர். இப்படிப்பட்ட முழு ஆளுமைத்திறன் கொண்ட குடிமக்களை உருவாக்க ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்படுதல் அவசியம். வெறும் மதிப்பெண் உற்பத்தியை மட்டுமே நோக்கமாய் கொண்ட ஆசிரியர்களிடம் நிச்சயம் சுயநலவாதிகளை மட்டுமே உருவாக்க முடியும். ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர் ஒவ்வொருவரையும் ஒரு விலைமதிக்க முடியாத வளமாக கருதி, அவர்களை நாட்டுக்கு உகந்த வகையில் வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் வல்லரசு கனவு நிறைவேறும். இல்லையேல் எந்த நிஞ்சா டெக்னிக்கை பயன்படுத்தியும் எதையும் சாதிக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x