Last Updated : 15 Sep, 2018 04:10 PM

 

Published : 15 Sep 2018 04:10 PM
Last Updated : 15 Sep 2018 04:10 PM

நலம், நலமறிய ஆவல் 52: தான் ஆடாவிட்டாலும் ‘தசை’ வலிக்கும்!

எனக்கு வயது 40. கடந்த 3 ஆண்டுகளாக உடல் வலியால் அவதிப்படுகிறேன். ஆரம்பத்தில் தலைவலி மட்டுமே படுத்தியது. அதற்குப் பிறகு கை, கால்களில் வலி தொடங்கியது. இதனால் இரவில் தூக்கம் கெடுகிறது. கால்களைத் தாங்கிப் பிடித்தால் அல்லது மசாஜ் செய்தால் வலி குறைகிறது. உடலில் ஓரிடத்தில் வலி குறைந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டால், அடுத்த சில நாட்களில் வேறெங்காவது வலி தொடங்கிவிடுகிறது. உடல் சோர்வாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? எங்கே சிகிச்சை பெறுவது?

- தாமரைச்செல்வி, செங்குன்றபுரம்

உங்களுக்கு வந்துள்ளது ‘தசைநார் வலி’ (Fibromyalgia) நோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. பரவலான உடல் வலியைக் குறிக்கும் மருத்துவ வார்த்தை இது. 25-லிருந்து 60 வயதுக்கு உட்பட்ட பெண்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது. உடல் வலியோடு உடல் களைப்பு, உறக்கமின்மை, ஞாபக மறதி போன்றவையும் தொல்லை கொடுக்கும்.

முதுகு வலி, இடுப்பு வலி, தலை வலி மட்டுமல்லாமல் உடலின் பல இடங்களில் வலி ஏற்படும். கைகால் குடைச்சல் அதிகம் தொல்லை கொடுக்கும். ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கங்களிலும் வலி ஏற்படுவது இதன் தன்மை. உதாரணமாக, இடது கை வலித்தால் அதே வேளையில் வலது கையும் வலிக்கும். வீட்டிலோ அலுவலகத்திலோ அன்றாடப் பணிகளைச் செய்ய விடாது. உற்சாகத்தைக் குறைக்கும். மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும்.

காரணம் என்ன?

இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சில நேரம் பல காரணங்கள் ஒன்று சேர்ந்துகொள்ளும். ஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மை பாதிக்கப்படுவதுதான் இந்த நோய் வர முக்கியக் காரணம். நமக்கு உடலில் வலி ஏற்படும்போது ‘செரட்டோனின்’ ஹார்மோன் சுரக்கும்.

நாம் வலியால் பாதிக்கப்படாத அளவுக்கு அந்த வலியை இது கட்டுப்படுத்தும். தசைநார் வலி ஏற்படுபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அல்லது முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இதனால் லேசான வலியைக்கூட இவர்களால் தாங்க முடியாது.

அடுத்து, சிலருக்கு நரம்பு மண்டலத்தில் வலியை உணரச் செய்கிற வேதிப் பொருட்களின் அளவு அதிகரித்துவிடும். அப்போது அவர்களுக்கு இந்த நோய் வரும். அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுபவர்களுக்கும் நீண்ட காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறோம். குடும்பத்தில் திடீரென ஏற்படும் அதிர்ச்சிகள், இழப்புகள், விபத்துகள், சோக நிகழ்வுகள் ஆகியவை இந்த வலியைத் தூண்டுகின்றன.

இது ஒரு பரம்பரை நோயாகவும் வருகிறது. புகைபிடிப்போர், உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், வேறு ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. சரியான தூக்கமின்மையும் அதீதக் குளிரும் இந்த வலியை அதிகப்படுத்தும்.

வலி வரும் இடங்கள்

இந்த வலியானது உடலில் குறிப்பிட்ட இடங்களில் ஆரம்பித்து, சிறிது சிறிதாக வலி அதிகரித்து, பிறகு பிற இடங்களுக்குப் பரவும். இந்த இடங்களை அழுத்தினால் வலியை உணர முடியும். அந்த இடங்கள் இவை: தலையின் பின்பகுதி, கழுத்தின் மேற்பகுதி, தோள்பட்டை, நடு நெஞ்சின் மேற்பகுதி, முழங்கை, இடுப்பு, உட்காரும் இடம், முழங்காலின் பின்பகுதி.

இந்த இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு, தசை இறுக்கமாக இருப்பதையும் உணர முடியும். இந்த நோய் உள்ளவர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். முக்கியமாக, காலையில் கண் விழிப்பது சிரமமாக இருக்கும், இன்னும் உறங்க வேண்டும்போல் இருக்கும். உடலில் சக்தி இல்லாததுபோல் உணர்வார்கள்.

சிகிச்சை என்ன?

இந்த நோய்க்கெனத் தனியாக எந்தப் பரிசோதனையும் இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். வலிக்கு வேறு காரணங்கள் இருப்பதைக் கண்டறிய மட்டுமே பரிசோதனைகள் தேவைப்படும். இந்த நோய்க்கு முதலில் குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவரது ஆலோசனைப்படி நரம்பு நோய் நிபுணர், மனநல நிபுணர், எலும்பு நோய் நிபுணர் ஆகியோரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

வலியைக் குறைக்க மருந்து, மாத்திரை மட்டும் போதாது. மன அழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றுக்கு மாத்திரைகளோடு மனநலத்துக்கும் ஆலோசனை (Cognitive behavioural therapy (CBT)  தேவைப்படும்.

இப்போது பெருநகரங்களில் வலி மருத்துவத்துக்கெனத் தனிப் பிரிவுகள்  (Pain management clinics) தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிலும் ஆலோசனை பெறலாம். இவற்றோடு சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியும் வரும். தியானம், யோகா போன்றவையும் உதவும். அக்குபங்சர், ஆயுர்வேத மசாஜ் ஆகியவையும் நல்ல பலனைத் தருகின்றன.

தடுப்பது எப்படி?

மன அழுத்தத்தைக் குறைக்கிற வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள். பகலில் உறங்குவதைத் தவிர்த்து, இரவில் சீக்கிரமே உறங்கப் பழகுங்கள். இரவில் தொலைக்காட்சி, மொபைல் போன் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சி மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். காபி அதிகமாகக் குடிக்க வேண்டாம். பழச்சாறு அருந்துவதை அதிகப்படுத்துங்கள். காய்கறி, கீரை, பழம் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிட்டு உடலின் பொது ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது, இசை கேட்பது, தோட்ட வேலை பார்ப்பது என உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்து, ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

(தொடர் நிறைவடைந்தது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x