Last Updated : 22 Jun, 2019 05:02 PM

 

Published : 22 Jun 2019 05:02 PM
Last Updated : 22 Jun 2019 05:02 PM

இனி எல்லாம் நலமே 10: சிறுமிக்கும் சினைப்பைக் கட்டி

பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் சினைப்பை (கருமுட்டைப்பை) மிக முக்கியமானது. பெண்களுக்கு இரண்டு சினைப்பைகள் உள்ளன. முட்டை வடிவிலான சினைப்பை, கருப்பையின் இருபுறங்களிலும் இருக்கும்.

இனப்பெருக்கம் தொடர்பான இரண்டு பணிகளைச் சினைப்பை செய்கிறது. கருவுறு தலுக்கான சினை முட்டைகளை உற்பத்தி செய்கிறது. இனப்பெருக்கத்துக்குத் தேவைப் படும் ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்ட்ரான் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு ஹார்மோன் கள்தாம் மாதவிடாய்ச் சுழற்சியைக் கட்டுப் படுத்துகின்றன.

சினைப்பைச் சிக்கல்கள்

மார்பக வளர்ச்சி, இடுப்புப் பகுதியின் கொழுப்பைக் கூட்டுதல், இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைத் தூண்டுதல் முதலியவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் சாத்தியப்படுகின்றன.

இதேபோல் புரொஜஸ்டீரோன் ஹார்மோனும் மாதவிடாய்ச் சுழற்சிக்கும் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது.

புரொஜஸ்டீரோன் பெண்களின் உடலைக் கர்ப்பமடைதலுக்குத் தயார்படுத்துகிறது. சினைமுட்டை கருவாக உருவாகும்போது கருப்பையின் சுவரில் உட்பூச்சு ஒன்றை உருவாக்குகிறது. சினைமுட்டை கருவுறாத போது இந்த உட்பூச்சு கலைந்துவிடும்.

பெண் கருவுறும்போது சினைப்பை அதிக அளவிலான ஈஸ்ட்ரோஜனையும் புரொஜஸ்டீரோனையும் சுரக்கத் தூண்டுகிறது. இது மற்ற சினைமுட்டைகள் முதிர்ச்சி அடைவதைத் தடுக்கிறது. பெண் குழந்தைகள் பிறக்கும்போதே சினைப்பையில் கிட்டத்தட்ட 20 லட்சம் முதிர்ச்சியடையாத சினை முட்டைகள் இருக்கும். ஆனால், பெண்கள் பருவ வயதை எட்டும்போது இது நான்கு லட்சம் சினைமுட்டைகளாகக் குறைந்துவிடும்.

ஒரு பெண்ணின் இனப்பெருக்கக் காலத்தில், அதாவது முதன்முதலாகச் சுழற்சி தொடங்கியதற்கும் முற்றிலுமாக மாதவிடாய்ச் சுழற்சி நின்றுவிட்ட காலத்துக்கும் இடையில் 400-500 சினை முட்டைகள் மட்டுமே முதிர்ச்சியடைந்து சினைப்பையில் இருந்து வெளிப்பட்டு சினைக்குழாய்களுக்குள் போகிறது. சினைக்குழாய்களில் ஆணின் விந்தணுவுடன் இணைந்து கரு உருவாகிறது. கரு உருவாகாதபோது சினைமுட்டையும் கருப்பையில் உருவான உட்பூச்சும் சிதைந்து மாதவிடாய் உதிரமாக வெளியேறுகிறது.

மாதவிடாய் சீராக வந்துகொண்டிருக்கிறது. திடீரென்று அது சீராக வராமல் ஒழுங்கற்று வருகிறது என்றால் அதற்கான காரணம் சினைப்பை சார்ந்ததாகவும் இருக்கலாம். சினைப்பையில் சிறு வயதிலேயே கட்டிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தக் கட்டிகள் இரண்டு வகைப்படும். ஒன்று நீர்க்கட்டி, அதாவது சிஸ்ட். இரண்டாவது உருண்டு, திரண்ட கட்டி. அதாவது டியூமர்.

நீர்க்கட்டியிலும் இரண்டு, மூன்று வகைகள் உண்டு. சின்னச் சின்னதாக உள்ள நீர்க்கட்டிகளை Polycystic Ovaries என்று சொல்வோம். பெரிய கட்டிகளாக ஓரிரண்டு கட்டிகள் இருந்தால் Ovarian Cyst ஆக இருக்கலாம். அல்லது எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) ஆகவும் இருக்கலாம்.

பலூன் போன்ற கட்டி

ஒரு பலூனில் தண்ணீர் ஊற்றி அது பெரிய கட்டி மாதிரி சினைப்பை மேல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஒரு இடத்தில் சிறியதாக முட்டை அளவில் இருப்பது இப்படி திடீரென்று ஊதிய பலூன்போல் இருந்தால் அந்த இடமே கனத்துவிடும். சினைப்பை, பட்டையான தசை நார்களால் கருப்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நீர் நிரப்பப்பட்ட பலூனைப் போன்ற கட்டியால் இந்தத் தசைநார் முறுக்கிக்கொண்டுவிடும். இப்படி முழுமையாகவோ ஒரு பகுதியாகவோ முறுக்கிக்கொள்ளும்பட்சத்தில் திடீரென்று மாதவிடாய் பிரச்சினையும் வரலாம். தீவிரமான வலியும் வரலாம். வலி இருந்துகொண்டேவும் இருக்கலாம்.

திருமணமாகாத பெண்களுக்கு உட்புறப் பரிசோதனை செய்ய முடியாது. கட்டி பெரியதாக இருந்தால் வயிற்றைத் தொட்டுப்பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். மற்றபடி பிரச்சினையைக் கண்டறிய ஒரே வழி ஸ்கேன் செய்து பார்ப்பதுதான். வலி என்று போனால் மகளிர் மருத்துவர் ஸ்கேன் செய்து பார்ப்பார். ஒரு பகுதி முறுக்கிக் கொண்டிருந்தால், லேப்ராஸ்கோபி செய்து அந்தக் கட்டியை அகற்றி, சினைப்பை முறுக்கிக்கொண்டதைத் திருப்பி வைத்துவிடலாம்.

முழுதாக முறுக்கிக்கொண்டிருந்தால் நன்றாகச் சுற்றிக்கொண்டுவிடும். ரத்த ஓட்டம் இருக்காது. சினைப்பைக்கு ரத்தம் போகவில்லை என்றால், அங்கே அழுகல் ஏற்பட்டுவிடும். தாமதமாக இதைக் கண்டுபிடிக்க நேரும்போது வேறு வழியில்லாமல் அந்தப் பகுதி சினைப்பையை எடுக்க நேர்ந்துவிடும்.

சினைப்பைக் கட்டி

அடுத்தது சினைப்பைக் கட்டி. Dermoid கட்டி என்று சொல்லக்கூடிய கட்டி இளவயதுப் பெண்களுக்கு வரக்கூடும். சினைப்பையில் எந்தக் கட்டி இருந்தாலும் அதை அகற்றியே ஆக வேண்டும். பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இல்லை. லேப்ராஸ்கோபி மூலம் கட்டியை மட்டும் அகற்றிவிடலாம். சினைப்பை என்பது ஒரு முக்கியமான உறுப்பு. முடிந்தவரை அதில் உள்ள கட்டி போன்றவற்றை அகற்றிவிட்டு சினைப்பையைக் காப்பாற்றத்தான் முயல் வோம்.

அப்படியே சினைப்பையில் புற்றுநோய் வந்தாலும் மருத்துவ முன்னேற்றத்தால் பாதிப்புள்ள சினைப்பையில் இருந்து சினைமுட்டைகளை எடுத்து உறையவைத்துப் பாதுகாக்க முடியும். புற்றுநோய் சிகிச்சை முடிந்தபிறகு அவர்களுடைய கருமுட்டை மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அலட்சியம் வேண்டாம்

இளம்பெண் ஒருவர் தாங்க முடியாத வலியோடு வந்தார். லேப்ராஸ்கோபி செய்து பார்த்ததில் ஒரு பக்கச் சினைப்பை முறுக்கிக்கொண்டு உள்ளே அழுகியிருந்தது. வேறு வழி இல்லாததால் அந்தப் பக்க சினைப்பையை அகற்ற வேண்டியதாயிற்று.

அகற்றிவிட்டு அந்தப் பெண்ணிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் சொல்லி விட்டோம். ஒரு சினைப்பை இல்லை யென்றாலும் இன்னொரு சினைப்பை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று சொன்னோம். இப்போது அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

அதே மாதிரி சில நேரம் சினைப்பையில் முட்டை மாதிரி இருக்க வேண்டியது வளராமல், ஒரு கோடு மாதிரிகூட இருக்கலாம். அப்படி இருந்தால் மரபணு சோதனை செய்ய வேண்டும். அல்ட்ரா சவுண்டில் பார்த்தால் சினைப்பை ஒரு மெல்லிய கோடு மாதிரி இருந்தால் கண்டிப்பாக மரபணு சோதனை செய்து பார்த்துப் பிரச்சினையைக் கண்டறிய வேண்டும்.

மாதவிடாயில் பிரச்சினை இருந்தாலோ வயிறு சிறிய அளவில் பெரியதாவது மாதிரி தோன்றினாலோ வலி இருந்தாலோ சின்ன வயதாக இருந்தாலும் கண்டிப்பாக ஸ்கேன் எடுக்க வேண்டும். பிரச்சினையைத் தள்ளிப் போடக் கூடாது. கவனிக்காமல் விடக் கூடாது.


(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x