Published : 15 Jun 2019 11:24 AM
Last Updated : 15 Jun 2019 11:24 AM

அடுக்குமாடி வீடு வாங்கும் முன்...

தனி வீட்டில் இருந்து பழக்கப்பட்ட நமக்கு இந்த அடுக்குமாடி வீடு முதலில் ஒவ்வாமையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அதற்குப் பழகியிருக்கிறோம். இந்தக் கலாச்சாரம் சென்னை மட்டுமல்லாது இப்போது தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் இது வெற்றிகரமாக இருக்கிறது. இம்மாதிரியான அடுக்குமாடி வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

முதலாவதாக மனை மூலப் பத்திரத்தின் அசல் உரிமையாளர் பெயர், இப்போது அந்தச் சொத்து மாறியவரின் பெயர், வீட்டுக் கட்டிடம் கட்டிக் கொடுத்தது யார், லே-அவுட், கட்டுமானத் திட்ட அனுமதி வாங்கியிருக்கிறார்களா இவைற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.

இரண்டாவது மின் கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது, நீங்கள் வீடு வாங்கும்போது கட்டணங்கள் எவையும் நிலுவையில் உள்ளனவா என்பதைக் கவனியுங்கள். அதை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டால் பிறகு கட்டுநர் அவர் வேலையைப் பார்த்துகொண்டு போய்விடுவார். பின்னர் அலைச்சல்தான் மிச்சமாகும். அடுக்குமாடி வீட்டின் யு.டி.எஸ். மனை சரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதே நல்லது.

கட்டுநர் சொல்வதைக் கேட்டு அப்படியே விட்டுவிட்டால், 20, 25 ஆண்டுகள் கழித்து குடியிருப்பை வேறொருவரிடம் விற்க அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் யு.டி.எஸ். வித்தியாசம் இருந்தால் அது உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்திவிடும்.

கட்டுநர் சொல்வதை அப்படியே கேட்காமல் அதை அளந்து பார்ப்பதையும் மனத்தில் போட்டுக்கொள்வது நல்லது. அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்று ஆவணங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சில நேரம் 2 அல்லது 3 மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப்பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியைக் கட்டிவிடுவார்கள்.

அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்தச் சொத்தை வாங்குவதற்கு முன்பாக அந்தச் சொத்து சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். சிலர் அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி இருப்பார்கள்.

ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே, அசல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்த பிறகு முடிவு எடுங்கள். அசல் பத்திரம் தொலைந்துவிட்டது என்று கூறினால் அதுதொடர்பாகக் காவல் நிலையத்தில் கொடுத்த புகார், அந்தப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டுப் பாருங்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி நகல் பத்திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராயுங்கள்.

ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதே ‘பவர் ஆஃப் அட்டர்னி’. அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறரா? இல்லையா என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள்.

சில நேரம் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து செய்திருக்கலாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல்வார்கள். அந்தச் சொத்தில் கட்டப்பட்டு வாங்கப்படும் அடுக்குமாடி வீடுகளுக்கு பின்னர் சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பித்தலாட்டத்தைத் தவிர்க்க, தற்போது அதிகாரம் ரத்தானால் அந்த விவரம் அசல் அதிகாரப் பத்திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்படுகிறது.

அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழைக் கட்டுநர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதையும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் கட்டுநர்கள் கட்டுமானச் சான்றிதழ் வாங்கித்தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும் கேட்காமல் விட்டுவிடுவார்கள்.

ஒரு கட்டுநர் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றால், கட்டிய வீட்டில் விதிமுறை மீறல் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்வது கட்டுமானத் துறையில் வழக்கம்.

எனவே, கட்டுமான நிறைவுச் சான்றிதழ் மட்டுமல்ல, ஒவ்வொரு நிலையில் கட்டிடம் கட்டி முடித்ததற்கு நிறைவுச் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கத் தவற வேண்டாம். இதையெல்லாம் அடுக்குமாடி வீடு வாங்கும் கவனிக்கத் தவறாதீர்கள்.

-காயத்ரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x