Last Updated : 05 Sep, 2014 12:48 PM

 

Published : 05 Sep 2014 12:48 PM
Last Updated : 05 Sep 2014 12:48 PM

இளம்பெண்களின் செல்போன் மோகம் ஏன்?

ஆண்களைவிடப் பெண்கள் அதிகமான நேரத்தை செல்போனுடன் செலவழிக்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. கல்லூரி மாணவிகள் ஒரு நாளில் சராசரியாகப் பத்து மணி நேரத்தைத் தங்கள் செல்போனில் செலவிடுகிறார்கள். இதுவே, மாணவர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவின் பெய்லர் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் அறுபது சதவீத மாணவர்கள் தங்களுக்கு செல்போன் அடிக் ஷன் இருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு குறித்துச் சில மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஆர். வர்ஷினி, இரண்டாம் ஆண்டு, பி.எஸ்சி,
விஸ்காம், கிறிஸ்துவக் கல்லூரி, சென்னை.

என் வாழ்க்கையோட ஒரு பகுதியாக நான் மொபைலை நினைக்கிறேன். என்னுடன் பிறந்த தங்கையோ, தம்பியோ மாதிரிதான் என் மொபைலை நினைக்கிறேன். என் அம்மா, அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். நான் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் மொபைல் தான் பெரும்பாலான நேரங்களில் எனக்கு கம்பெனி கொடுக்கும்.

அதோடு, மொபைல் இருப்பதால்தான் தனியாக வீட்டில் இருக்கும்போது பெற்றோர், நண்பர்கள், கஸின்கள் என நெருங்கியவர்களிடம் தொடர்பில் இருக்க முடிகிறது.

பெண்களுக்கான ஒரு பாதுகாப்பு கருவியாக மொபைல் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பெண்கள் அதிகமாக அதைப் பயன்படுத்துவதற்கான காரணம், இதுவரை அவர்களுக்குக் கிடைக்காத ஒரு சுதந்திரம் ஸ்மார்ட் போன் மூலம் கிடைப்பதாக நினைக்கிறார்கள்.

வி.எஸ். சிவபிரசாந்த், இரண்டாம் ஆண்டு, பி.ஏ. ஆங்கிலம்,
தூய தாமஸ் கல்லூரி, சென்னை

என்னைப் பொறுத்த வரை யாராக இருந்தாலும் செல்போனை அதிகநேரம் பயன்படுத்துவது ஆபத்துதான். எல்லாரிடமும் இப்போது ஸ்மார்ட் போன் இருக்கிறது.

ஸ்மார்ட் போன் வந்த பிறகு இளைஞர்களிடம் விளையாட்டில் இருக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. பெரும்பாலும் அவர்களுடைய விளையாட்டும் மொபைலி லேயே சுருங்கி விடுகிறது.

என். ஐஸ்வர்யா, பி. டெக்., அம்ருதா பொறியியல் கல்லூரி,
கோவை

நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதைப் பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போனுடன் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கேன்டி க்ரஷ் போன்ற கேம்ஸ், போட்டோ எடிட்டிங், சோஷியல் மீடியா எனப் பல விஷயங்கள் எங்களை ஸ்மார்ட் போனுடன் அதிக நேரத்தை செலவிடவைக்கிறது.

கூச்ச சுபாவம் உடையவர்கள்கூட டெக்ஸ்டிங் செய்வதால் எளிமையாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் அதே சமயம், அவர்கள் ஒருவித மாய உலகத்திலேயே வாழ்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இதில் நிறைய ஆபத்தும் இருக்கவே செய்கிறது.

ஜெ. அசாருதீன், மூன்றாம் ஆண்டு,
எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்,
எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி, சென்னை

இன்று பெரும்பாலான இளைஞர்களிடம் செல்போன் அடிக் ஷன் காணப்படுகிறது. இதில் ஆண், பெண் விதிவிலக்கல்ல. அதிகமான நபர்களுடன் நட்பு பாராட்ட நினைப்பதாலேயே பெண்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துகிறார்கள்.

ஆண்களுக்கு ஸ்மார்ட் போன் தவிர பிளே ஸ்டேஷன் போன்ற நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், பெண்கள் ஸ்மார்ட் போனை மட்டுமே பிரதானமான பொழுதுபோக்கு அம்சமாக நினைக்கிறார்கள். அதனால்தான் பெண்கள் நிறைய நேரம் செல்போனுடன் கழிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x