Published : 21 Sep 2014 10:02 AM
Last Updated : 21 Sep 2014 10:02 AM

திரை விமர்சனம்: ஆடாம ஜெயிச்சோமடா

விளையாட்டில் நடக்கும் உள்குத்து, ஓரவஞ்சனை, ஊழல் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்ட ‘லீ’, ‘வல்லினம்’ ‘எதிர்நீச்சல்’ ஆகிய படங் களின் வரிசையில் தன்னையும் இணைத் துக் கொண்டிருக்கிறது ‘ஆடாம ஜெயிச் சோமடா’. கிரிக்கெட்டில் மேச் பிக்ஸிங் எப்படி நடக்கிறது என்பதை நகைச் சுவையைத் தொட்டுக் கொண்டு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பத்ரி. அவரது முயற்சி வென்றதா?

பன்னீர் (கருணாகரன்) கால் டாக்ஸி ஓட்டுநர். இவரது டாக்ஸியில் ஏறுகிறார் கிரிக்கெட் மேச் பிக்ஸிங் தரகரான தயாளன் (பாலாஜி). தயாளன் கைப் பையில் கட்டுக்கட்டாக இருக்கும் பணம், அவர் பழகும் விதம் இரண்டையும் பார்க்கும் பன்னீர், பத்து லட்ச ரூபாய் கடனால், திருமணமான மறுநாளே மனைவியைப் பிரிந்து வாழும் தனது சோகக் கதையைச் சொல்கிறார். இரக்கப்படும் தயாளன் “எனக்கு ரெண்டு நாள் மட்டும் கார் ஓட்டு, உன் கடனை நானே அடைக்கிறேன்” என்கிறார். இதைக் கேட்டுக் குஷியாகும் பன்னீர், மறுநாள் காலை தயாளனைத் தேடி அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்குள் நுழைகிறான். அங்கே தயாளன் கொலையாகிக் கிடக்கிறார்.

இதைச் சொல்லக் கமிஷனர் அலுவலகம் வரும் பன்னீரைக் கைது செய்து விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் (பாபி சிம்ஹா). சென்னையில் நடக்கப்போகும் ஒருநாள் போட்டியில் மேச் பிக்ஸிங்கில் ஈடுபட இருக்கும் முக்கிய புரோக்கரைப் பிடிக்க, கமிஷனரால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி இவர். தயாளன் எப்படிக் கொலையானார்? அவருக்கும் கிரிக்கெட் சூதாட்ட வலைப் பின்னலுக்கும் என்ன தொடர்பு? முக்கிய புரோக்கரைப் பிடிக்க முடிந்ததா என்பதுதான் மீதிப் படம்.

கதைக் கரு மேச் பிக்ஸிங் என்பதால் திரைக்கதையில் த்ரில்லர் தன்மை வந்து தானாக உட்கார்ந்து கொள்கிறது. எல்லாக் கதாபாத் திரங்களையும் விழுங்கிவிட்டுக் கஷாயம் குடித்துச் செரிமானம் செய்ய நினைப் பவர்களாகப் படைத்திருக்கிறார் இயக்குநர். இதனால் கலகலப்பான காட்சிகள் அமைக்கவும், காமெடி வசனங்களுக்கும் தோதான ஆடுகளம் கிடைத்துவிடுகிறது. காமெடி ஆட்டம் முதல் பாதியில் திணறினா லும் இரண்டாம் பாதியில் பவுண்டரிகள் பறக்கின்றன. கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய படத்தில் சூதாட்டம் பற்றிய நுட்பமான அம்சங்கள் அதிகம் வெளிப்படாதது ஒரு பெரிய உறுத்தல்.

இயக்குநர் பத்ரி பொருத்தமான நடிகர் களைத் தேர்வு செய்தி ருக்கிறார். திரைக்கதை சில இடங்களில் தடுமாறுகிறது. சிவாவின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

அப்பாவித்தனம் மொத்தத்தையும் தனது உருண்டைக் கண்கள் வழியே கொட்டும் கருணாகரனும் அவரது ஜோடியாக வரும் விஜயலட்சுமியும் நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்கள். குடிசைப் பகுதியைச் சேர்ந்தவராக வரும் விஜயலட்சுமி பேசும் சென்னைத் தமிழ் பரிதாபமாக இருக்கிறது. ஆனால், தான் கல்யாணம் செய்துகொள்பவன் வீட்டில் தனியாகக் கழிவறை, குளியலறை இருக்க வேண்டும் என்று விஜய லட்சுமி கேட்கும் சீதனம் ரசிகர்களைக் கலங்க வைக்கிறது.

புரோக்கராக வரும் பாலாஜி கவர்கிறார். இவரது கொலைக் கான முடிச்சை இயக்குநர் விடுவிக்கும்போது ஒப்புக் கொள்ளும்படி இருக்கிறது. பாபி சிம்ஹா படம் முழுவதும் ரஜினியின் உடல்மொழி, அவரது பாணி வசன உச்சரிப்பு இரண்டையும் கடன் வாங்கிக்கொண்டு வருவதை ரசிக்க முடியவில்லை. பாசமான அப்பா, யதார்த்தமான வில்லன் என முத்திரை குத்தப்பட்ட ‘ஆடுகளம்’ நரேன் ஒரு பவர் ஸ்டார் படத்தைத் தயாரித்துவிட்டுப் படும் பாடு ரகளையான ஏரியா.

துவாரகாநாத் ஒளிப்பதிவில் பிரகாசிக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் எல்லாப் பாடல்களுமே சுமார் ரகம். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒரு த்ரில்லர் கதையை நகைச்சுவை ரகளையாகச் சித்தரிக்க முயலும் இயக்குநர் அதில் ஓரளவு வெற்றிபெறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x