Last Updated : 01 Jun, 2019 12:17 PM

 

Published : 01 Jun 2019 12:17 PM
Last Updated : 01 Jun 2019 12:17 PM

பவர் ஆஃப் அட்டர்னி இனி செல்லாது?

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் ஒரு உத்தரவு வீடு வாங்குபவர்கள், விற்பவர்களுக்கிடையே வியப்பையும் அவர்களில் கணிசமானவர்களுக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.

இனி ‘ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி’ மூலமாக நடந்த வீடு, நில விற்பனைகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என்பதுதான் அது. இதற்கான காரணங்களைப் பார்ப்பதற்குமுன் ‘பவர் ஆஃப் அட்டர்னி' குறித்த சில அடிப்படை அம்சங்களைப் பார்ப்போம்.

நான் வெளியூரில் இருக்கிறேன் அல்லது வெளிநாட்டில் இருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். உள்ளூரில் இருக்கும் என் சொத்தை விற்க வேண்டும். இதற்காக நான் அந்த ஊருக்கு வந்து போய்க் கொண்டிருக்க முடியாது.

இந்த நிலையில் எனக்காக, என் சார்பில் நீங்கள் சில சட்டபூர்வமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இவை என்னைக் கட்டுப்படுத்தும். இந்த நோக்கத்தில் உங்களுக்கு நான் அளிப்பதுதான் ‘பவர் ஆஃப் அட்டர்னி’ பெரும்பாலும் NRI-க்கள்தாம் இதை அளிக்கிறார்கள்.

அடுத்து வயதானவர்கள், மிகவும் நோய்வாய்ப்பட்டவர்கள். எக்கச்சக்கமாக சொத்து வைத்திருக்கும் வணிகர்களும் (அரசியல்வாதிகளும்தாம்) ‘பவர் ஆஃப் அட்டர்னி' அளிப்பது சகஜம். இதில் நம்பிக்கை என்பது மிக முக்கியமான விஷயம்.

‘பவர் ஆஃப் அட்டர்னி' என்பது இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று ‘ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி'. இன்னொன்று ‘ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டர்னி'.

‘ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி' என்றால், பலவகை உரிமைகளை (பொறுப்புகளை) உங்களுக்கு நான் அளிக்கிறேன். என் சார்பில் வாடகை வசூலிக்கலாம், என் வீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கலாம். என் வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை நீங்கள் என் பிரதிநிதியாக இருக்கலாம்.

‘ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டர்னி' என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மட்டுமே கொடுக்கப்படுவது. எடுத்துக்காட்டாக, என் வீட்டை என் சார்பில் விற்கும் உரிமையை உங்களுக்குத் தரலாம் (ஆனால், பணம் என் கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படும்!).

‘ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி' என்பதை எப்போது வேண்டுமானாலும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ‘ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டர்னி'யைப் பொறுத்தவரை அதற்கான நோக்கம் நிறைவேறும்போது, அந்த உரிமை தானாகவே முடிந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, என் சார்பாக உங்களை விற்கச் சொன்ன வீடு விற்கப்பட்டுவிட்டால், அந்த ‘பவர் ஆஃப் அட்டர்னி' இயல்பாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

அதேபோல ‘பவர் ஆஃப் அட்டர்னி' கொடுத்துவிட்டதால் என் சொத்துகள் தொடர்பான பரிவர்த்தனைகளை நானே மேற்கொள்ளக் கூடாது என்று அர்த்தமில்லை. உங்களுக்கும் அந்த உரிமையை அளிக்கிறேன், அவ்வளவுதான்.

ஒரே வேளையில் சொத்தை அதன் உரிமையாளரும், ‘பவர் ஆஃப் அட்டர்னி' பெற்ற நபரும் இருவேறு நபர்களுக்கு விற்பதாகக் கூறி அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு.

ஆனால், இப்போது உச்ச நீதிமன்றம் ‘பவர் ஆஃப் அட்டர்னி' மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனைகள் செல்லுபடி ஆகாது என்று கூறுவதற்கு, வேறொரு முக்கியப் போக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

சிலர் ஒருவகைத் தில்லுமுல்லு வேலையில் ஈடுபடுகின்றனர். என் வீட்டை நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாம் இருவரும் ஒரு விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.

இதில் விற்பனை தொடர்பான நிபந்தனைகளும் வீட்டை உங்களுக்கு எப்போது கொடுப்பது என்பது தொடர்பான விவரங்களும் அளிக்கப்படும். அவை விரிவாகவே இருக்கும்.

அடுத்ததாக நான் உங்களுக்கு ஒரு ‘மீட்டுக்கொள்ள முடியாத பவர் ஆஃப் அட்டர்னி’ (Irrevocable Power of Attorney) அளிப்பேன். இதன் மூலம் என் சொத்தை முழுக்க முழுக்க நீங்களே நிர்வகிக்கலாம். இறுதியாக இன்னொன்றையும் செய்வேன். நான் இறந்தால் அந்த வீடு உங்களுக்குச் சேரும் என்று எழுதிவைத்து விடுவேன்.

ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? பல காரணங்கள். இதன் மூலம் பதிவுக் கட்டணம், ஸ்டாம்ப் டியூட்டி போன்றவற்றைத் தவிர்க்கலாம். முதலீட்டு லாப வரிகளைத் (Capital Gains Tax) தவிர்க்க முடியும். கறுப்புப் பணத்துக்கும் இது மறைமுகமாக வழிவகுக்கிறது. இதையெல்லாம் உணர்ந்துதான் உச்ச நீதிமன்றம் மேற்படி உத்தரவை அளித்திருக்கிறது.

அதுவும் குறிப்பாக டெல்லியில் இந்த வகையில் ‘விற்பனைகள் அதிகம்’ நடைபெறுகின்றன. இனி, பதிவுசெய்யப்படும் விற்பனைப் பத்திரங்கள் மூலம் மட்டுமே அசையா சொத்துக்கள் ஒருவரிடமிருந்து மற்றவரை அடையும் (மற்றபடி ‘பவர் ஆஃப் அட்டர்னி' என்பது இல்லாத வகையில் உள்ளபடி உயில் எழுதினால் அது செல்லுபடியாகும்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x