Published : 15 Jun 2019 11:23 AM
Last Updated : 15 Jun 2019 11:23 AM

கருங்குறுவை மருந்து

பாரம்பரிய நெல் ரகங்களில் மருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது.

இந்த நெல் ரகத்தின் வயது நூற்றிப் பத்து நாள். நெல் கறுப்பாகவும் அரிசி சிவப்பாகவும் இருக்கும். நான்கு அடிவரை வளரும். நீர் நின்றாலும் தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கக்கூடியது.

கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம். கருங்குறுவை சாதத்துடன் மூலிகை சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டுவந்தால், யானைக்கால் நோய் மட்டுப்படும். கருங்குறுவை அரிசியில் குஷ்டத்தையும் விஷக்கடியையும் போக்கும் சக்தி உள்ளது. மேலும், உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தியும் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த அரிசி ஒரு பங்கும் தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறிவிடும். அதற்கு `அன்னக்காடி’ என்று பெயர். காடி என்றால் மருந்து என்று அர்த்தம்.

இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான காலரா மட்டுப்படும். கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, வீரியம் அதிகரிப்பதுடன் கிரியா ஊக்கியாகவும் செயல்படும்.

நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகி மருத்துவமனை செல்லாமலேயே குணமடையலாம்.

குறுவை நெல் மணிகள் ஒரு வருடம் பூமியில் கிடந்தாலும் மக்கிப்போகாது. ஒரு வருடம் கழித்துக்கூட முளைக்கும் தன்மை உடையது. தமிழகம் தவிர இந்த நெல் கர்நாடகம், கேரள மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x