Published : 03 Jun 2019 12:13 PM
Last Updated : 03 Jun 2019 12:13 PM
வாழ்க்கையில் இலக்குகளை அடைவதில் மிகப்பெரிய தடைகளாக இருக்கும் விஷயங்களில் முக்கியமானது பணவீக்கம். பணவீக்கம் எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கிறது, எப்படி அந்த பாதிப்புகளிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வது போன்றவற்றை இங்கே பார்க்கலாம்.
பணவீக்க பாதிப்புகள்
பணவீக்கம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் ஓய்வு பெற்றவர்களை அதிகமாக பாதிக்கிறது. ஏன்? ஓய்வு பெற்றவரின் மிகப்பெரிய பிரச்சினை மிச்சமிருக்கும் காலத்தை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு போதுமான பணம் இருக்கிறதா என்ற கவலைதான்.
ஏனெனில் வருமானம் இல்லாத சூழலில், ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகப்படியான செலவுகள் இருக்கும். குறிப்பாக அதிகரிக்கும் மருத்துவ செலவுகள். பணவீக்கத்தை விட மருத்துவ செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும்.ஏனெனில் பெரும்பாலும் நீங்கள் உங்களுடைய ஓய்வு கால வாழ்க்கைக்கான நிதியை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
அந்த முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் உங்களுடைய செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக, உங்களுடைய பெரும்பாலான முதலீடுகள் வங்கி இருப்புகளில் நிலையான ஒரு குறிப்பிட்ட வட்டி வருமானத்தை மட்டுமே ஈட்டுவதாக இருக்கக் கூடும்.
நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்களுடைய வாழ்க்கை முறை செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனாலும், உங்களுடைய வருமானம் ஓரளவுக்கு பணவீக்க பாதிப்புகளைச் சமாளிப்பதற்கு உதவியாக இருக்கும். அதேசமயம், உங்களுடைய வாழ்க்கை இலக்குகளை அடைய மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
உதாரணத்துக்கு, உங்களுடைய மகளின் கல்லூரி படிப்புக்காக எட்டு ஆண்டுகளாக சேமித்துவருகிறீர்கள். கல்வி செலவின் பணவீக்கம் 10 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், பணவீக்கம் அதிகரித்து 12 சதவீதமாக இருக்கிறது எனில், நீங்கள் மாதாமாதம் தவறாமல் முதலீடு செய்து
வந்திருந்தாலும், உங்களுடைய மகளின் கல்லூரி படிப்புக்குத் தேவையான தொகையை அடைய முடியாமல் போகலாம். இந்தப் பற்றாக்குறை ஓய்வு பெற்ற ஒருவருக்கு நிகராக உங்களையும் பெரிய அளவில் கஷ்டப்படுத்தாவிட்டாலும், இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் வாங்க வேண்டிய நிலையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்துக்காக சேமிக்கப்பட்டதிலிருந்தோ எடுக்க வேண்டிய நிலையோ ஏற்படலாம். ஓய்வுபெற்றவர்கள் எனில் கடன் கூட அவ்வளவு எளிதில் கிடைக்காது.
பணவீக்க பிரச்சினையை எப்படி சமாளிப்பது?
பெரும்பாலான சமயங்களில் பணவீக்கத்துக்கு நாம் எதிர்வினை ஆற்றி விடுவோம். ஏன்? அடுத்த ஆண்டு பண வீக்கத்தை இப்போது கணிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி இருக்கும் போது எட்டு ஆண்டுகள் கழித்து மகள் கல்லூரியில் நுழையும்போது பணவீக்கம் என்னவாக இருக்கும் என்பதை எப்படி கணிக்க முடியும்.
எனவே, பணவீக்கம் உயரும்போது அது நம்முடைய வாழ்க்கை இலக்குகளைப் பாதிக்க ஆரம்பிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பெரும்பாலானோர் செய்வது செலவு களைக் குறைத்து அதிகமாக சேமிப்பது. மாறாக வேறு என்ன செய்ய முடியும்? உங்களுடைய முதலீடுகளை அதி
கரிக்கும் பணவீக்கத்தினால் வர வாய்ப்புள்ள பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அதற்குச் சிறந்த வழிபங்குகளில் முதலீடு செய்வது. ஏன்
என்கிறீர்களா? இந்தியாவில் பணவீக்கத்தை சரிசெய்யக்கூடிய முதலீட்டுதிட்டங்கள் இல்லை. உங்களுடைய பங்கு முதலீடு சிறப்பாக செயலாற்றினால், அதனால் கிடைக்கும் வருமானம் பணவீக்கத்தை சரி செய்துகொள்ளும்.
இதற்கு அர்த்தம் பணவீக்கத்தை சரி செய்யும் திட்டம் பங்கு முதலீடு என்பதல்ல. மாறாக, பங்குகளில் செய்யப்படும் முதலீட்டின் மீது மற்ற முதலீடுகளோடு ஒப்பிடுகையில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருப்பதால், பணவீக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை இந்தக் கூடுதல் வருமானத்தைக் கொண்டு சரிசெய்துகொள்ள முடியும்.
ஏன் ரியல் எஸ்டேட் அல்லது கமாடிட்டி போன்றவற்றில் முதலீடு செய்யக்கூடாது? பணவீக்கம் உயரும் போது, வாடகை வருமானம் உயரும். அதேபோல் கமாடிட்டி விலையும் பணவீக்கத்தோடு சேர்ந்து உயரும்.
ஆனால், ரியல் எஸ்டேட் முதலீடுகளில் பணமாக்கல் என்பது அவ்வளவு எளிதல்ல, கமாடிட்டியைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கம் என்பது மிகவும் அதிகம். எனவே இவற்றில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் இல்லை.
காலப்போக்கில் சந்தையில் பணவீக்கத்தைச் சரிசெய்யக்கூடிய முதலீட்டு திட்டங்கள் வரலாம். ஆனால், அதுவரை பங்குச் சந்தையிலும் குறிப்பிட்ட அளவில் முதலீடுகளைச் செய்து பணவீக்கத்தின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதே சிறந்தது.
இதில் மற்றுமொரு அபாயம் இருக்கிறது. ஒருவேளை பணவீக்கம் அதிகரித்து, பங்குச் சந்தைகள் அதிக அளவில் வீழ்ச்சி கண்டுவிட்டால்? உங்களுடைய வாழ்க்கை இலக்குகள் பணவீக்கத்தினால் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உங்களுடைய முதலீட்டின் மதிப்பும் குறைய ஆரம்பிக்கும்.
ஆனால், இத்தகைய அபாயத்தைக் கண்டுணர வேண்டியது உங்களுடைய பொறுப்பு. வங்கி இருப்புகளில் மட்டுமே முதலீடு செய்வது, பணவீக்கம் உயரும்போது உங்களுடைய இலக்குகளை அடைவதில் தோல்வியை ஏற்படுத்திவிடும். பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம், பணவீக்கத்தைச் சமாளிக்கக் கூடிய வருமானத்தை அடைவதற்கான வாய்ப்புகளை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். உண்மைதான், பங்குகளில் முதலீடு செய்வது ரிஸ்க்கானதுதான். ஆனால், சில நேரங்களில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே பெரிய ரிஸ்க் ஆகிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT