Last Updated : 11 Jun, 2019 12:48 PM

 

Published : 11 Jun 2019 12:48 PM
Last Updated : 11 Jun 2019 12:48 PM

வெற்றி நூலகம்: சிந்தனையின் ஒளி முத்துக்கள்...

‘கல்வி ஓர் அரசியல் நடவடிக்கை’ என்றார் பிரேசில் நாட்டுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ ஃப்ரெய்ரே. இன்றைய இந்தியக் கல்வி முறையும் பாடத்திட்டங்களும் கற்பிக்கும் வழிமுறைகளும் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன என்று யோசிக்கிற எவரையும் நிச்சயமாக வருத்தம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தை, வாழ்க்கையை, சக மனிதர்களைப் புரிந்துகொள்ளவே கல்வி என்பதாக இல்லாமல், ‘வேலை பெறுவதற்காகவே கல்வி’ எனும் ஒற்றைப் புரிதலோடு சுருங்கிக் கிடக்கிறது கல்வி.

‘வகுப்பறைகளில் உருவாகிறார்கள் நாளைய தலைவர்கள்’ என்று வாய் ஓயாமல் பேசுகிறவர்கள் நாம். ஆனால், நாளைய தலைவர்கள் உருவாகுவதற்கான நல்ல சூழல், நெருக்கடி தராத பாடத்திட்டம், மாணவர்களிடம் நட்போடு பேசும் ஆசிரியர் என எதையுமே வகுப்பறைக்குள் அனுமதிக்காதவர்களாகவே இருக்கிறோம்.

இருள் அகற்றும் ஒளி

மாணவர்களை இன்னமும் மதிப்பெண்ணை நோக்கி மட்டுமே ஓடும் பந்தயக் குதிரைகளாகவே பழக்கிக்கொண்டிருக்கிறோம். கல்வியில் அடிப்படையான மாற்றங்களை உருவாக்காமல் சமூக மாற்றங்கள் விளையாது என்பதை அவ்வப்போது உரத்த குரலில் சொல்ல வேண்டியுள்ளது.

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கவிஞர், எழுத்தாளர், அறிவொளி இயக்கக் கருத்தாளர், தமிழாசிரியர் எனப் பன்முகப்பட்ட அடையாளங்களோடு இயங்கிவருபவர் க.அம்சப்ரியா. கல்வி குறித்த தன்னுடைய பார்வையை இவர், ‘கல்வி 100 சிந்தனைகள்’ என்ற புத்தகமாக எழுதியுள்ளார். பெற்றோர், ஆசிரியர், மாணவர், புத்தகங்கள், கல்வி, வகுப்பறை, சமுதாயம் என 7 தலைப்புகளின்கீழ் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு சிந்தனையும் இருளடர்ந்த பாதையில் மின்னும் ஒளி முத்துக்களாக நமக்கு வழிகாட்டுகின்றன.

‘மாணவனுக்குப் போதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருளாக ஆசிரியரும், தான் கற்றுக்கொள்ள கொடுக்கப்பட்ட பொருளாக மாணவரும் புத்தகத்தை அணுகினால் அது வெறும் எழுத்துகளால் உருவாக்கப்பட்ட புத்தகமே. புத்தகத்தை ஆசிரியரும் மாணவரும் இணைந்து நேசிக்கத் தொடங்குகிறபோதே புத்தகத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும். புத்தகம் அறிவுச் சாளரம்

மட்டுமல்ல; மனித நேயத்தின் முகவரியுமாகிறது’ என்று புத்தகத்தின் சிறப்பைச் சொல்கிறார். நூறு சிந்தனைகளுக்கு இந்த ஒரு பதம் போதும்தானே!

சிந்தனை வரிகளுக்குக் கூடுதல் அர்த்தம் தரும் வகையில் இடம்பெற்றுள்ள பள்ளி மாணவர்களின் நவீனக் கோட்டோவியங்களும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. குழந்தைகள், கல்வி குறித்து அக்கறைப்படுகிற அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய சிந்தனைத் தொகுப்பு இது.

கல்வி 100 சிந்தனைகள்

க.அம்சப்ரியா

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,

பெரம்பூர், சென்னை - 600 011.

பக்கம்: 120, விலை: ரூ.110

செல்: 9444640986

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x