Last Updated : 25 Jun, 2019 10:35 AM

 

Published : 25 Jun 2019 10:35 AM
Last Updated : 25 Jun 2019 10:35 AM

மாற்றுத் திறனாளி வீரரின் மகத்தான சாதனை!

சராசரியான சூழலில் படித்து முடித்து, வேலை கிடைத்து, அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதையே சவாலாகப் பலர் கருதுகிறோம். ஆனால், அசாதாரணச் சூழல்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டும் சிலரும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி ஓட்டத்தில் மாவட்டம் தொட்டு, சர்வதேசப் போட்டிகள்வரை சாதித்துக்கொண்டிருக்கும் எஸ்.மனோஜ்குமார் (28). இவர் கோவையைச் சேர்ந்த இயந்திரப் பராமரிப்பாளர்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சமீபத்தில் பங்கேற்ற சர்வதேச அளவிலான பாரா அத்லடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் நடைபெற்றது.

அதில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர், 100 மீ., 200 மீ. சக்கர நாற்காலி ஓட்டத்தில் (வீல் சேர் ரேஸ்)  தலா 1 வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.  கோவை நேரு விளையாட்டு அரங்கில் கொளுத்தும் வெயிலில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மனோஜ்குமாரைச் சந்தித்தோம்.

ஒரு நம்பிக்கைக் கீற்று

“தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள கூடலூரைச் சேர்ந்தவன் நான். தந்தை சபாபதியும் தாய் ஜெயம்மாவும் கூலித் தொழிலாளர்கள். பள்ளிப் படிப்பைச் சொந்த ஊரில் முடித்துவிட்டு, உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சேர்ந்தேன். படிப்பைப் பாதியில் கைவிட்டேன்.

குடும்பச் சூழல் காரணமாக வேலை தேடி கோவைக்கு வந்தேன். யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. பின்னர் ‘அனுக்கிரஹா மாற்றுத் திறனாளிகள் இல்ல’த்தில் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகளாக எந்த வேலையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2015-ல்

 மாற்றுத் திறனாளி கன்னியப்பன், சரவணம் பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி நடப்பதாகவும், ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தத் தகவல் எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது” என்கிறார் மனோஜ்குமார்.

100 மீ. சக்கர நாற்காலி ஓட்டப் போட்டியில் முதன் முறை கலந்துகொண்டபோதே முதலிடம் பிடிக்க மனோஜ்குமாரின் தன்னம்பிக்கை அதிகரித்தது. அடுத்தகட்டமாக, ‘சஹாய் ஸ்பைனல் இஞ்சுரி ரிஹாப் சென்டர்’ நிர்வாகிகள் பயிற்சி அளிக்க 2016-ல் சென்னையில் நடைபெற்ற மாநில மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் 100 மீ., 200 மீ. ஓட்டத்தில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்றார். அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியிலும் முதலிடம் பிடித்தார்.

உதவ நீளும் கரங்கள்

இதையடுத்து, சர்வதேசப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலி மூலமாகத்தான் அதில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதன்விலை ரூ.4.5 லட்சம்.

வாங்கும் திறன் இல்லாததால், போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இவருடைய நிலையை அறிந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரீத்தி சீனிவாசன்  போட்டித் தரத்தில் உள்ள சக்கர நாற்காலியை  வாங்கித் தந்திருக்கிறார்.

இதை அடுத்து, 2017-ல் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100, 200 மீ. பந்தயங்களில் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை மனோஜ்குமார் வென்றார்.

சமீபத்தில் வட ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டி குறித்து பேசுகையில், “முதலிடம் பிடித்த வீரரைவிட ஒரு விநாடி மட்டுமே பின்தங்கியிருந்தேன். முதல் சர்வதேசப் போட்டி என்பதால் ஏற்பட்ட பதற்றத்தால் முதலிடத்தை இழக்க நேரிட்டது. 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறேன்.

வரும் நவம்பர் மாதம் துபாயில் உலக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடக்கிறது. அதற்காகத்தான் தற்போது தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதில் நிச்சயம் பதக்கம் வெல்வேன். பயிற்சியாளரும், இயன்முறை மருத்துவருமான பழனிசாமி எனக்கு பயிற்சி அளித்து வருகிறார்” என்றார்.

தற்போது தனியார் நிறுவனமொன்றில் இயந்திரப் பராமரிப்பாளராக வேலை செய்து வரும் இவர், ஏழ்மையில் வாடும் தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தமிழக அரசு உதவிக்கரம் நீட்டுமா என்ற கேள்வியுடன் இருக்கிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: sathiyaseelan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x