Published : 23 Mar 2018 10:52 AM
Last Updated : 23 Mar 2018 10:52 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: இரண்டு வடசென்னை

‘புதுப்பேட்டை’, ‘பொல்லாதவன்’ திரைப்படங்கள் தொடங்கி வடசென்னைக்கும் தனுஷுக்கும் நல்ல செண்டிமெண்ட் உண்டு. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதேநேரம் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று கதாநாயகிகளுடன் இணைந்து வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்ட மற்றொரு படமான ‘மாரி-2’-லும் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்கிறது தனுஷ் தரப்பு.
 

வங்கத்திலிருந்து வருபவர்!

விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஸ்கெட்ச்’ படத்தில் காயத்ரியாக வந்து கவர்ந்தவர் மேற்கு வங்கத்திலிருந்து வந்திருக்கும் பெங்காலிப் பெண் மெஹாலி. முதல் படத்தில் கிடைக்காத கதாநாயகி அங்கீகாரம் தற்போது கவிஞர் பா.விஜய் எழுதி, இயக்கி, நடிக்கும் ‘ஆருத்ரா’ படத்தில் கிடைத்திருக்கிறது. மேலும் அறிமுக இயக்குநர் மகா என்பவர் இயக்கும் ‘ரகடம்’என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இவை ஒருபுறமும் இருக்க, டெல்லி மாணவி நிர்பயா துயரச் சம்பவம் ‘நிர்பயா’ என்ற பெயரிலேயே வங்காள மொழியில் படமாகி வருகிறது. அதில் ‘டைட்டில்’கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் மெஹாலி.
 

வலையிலிருந்து திரை

சின்னதிரை, மாடலிங் உலகிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது யூடியூப் சமூகக் காணொலியில் பிரபலமானாலும் திரையில் தெறிக்கவிடலாம் என்பதற்கு ஹரிஜா உதாரணமாகியிருக்கிறார். யூடியூபில் பிரபலமான இவர், ரமேஷ் வெங்கட் இயக்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இதற்கிடையில் இரண்டாவது வாய்ப்பும் இவருக்குக் கிடைத்துவிட்டது. ‘டார்லிங்’ படப் புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படத்தில் இவர் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம்.
 

இயக்கமும் நடிப்பும்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார் இயக்குநர் சுசீந்திரன். இது முழுவதும் புதுமுகங்கள் நடித்திருக்கும் படம். அடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்துக்கு ‘ஜீனியஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தை இயக்கும் வேலைகள் ஒருபக்கம் இருக்க ‘ சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்திலும் சுசீந்திரன் நடித்து வருகிறார். இதே படத்தில் இயக்குநர் மிஷ்கினும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகி்றார்.

பாலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ்

பொதுப் பிரச்சினைகளுக்குச் சட்டென்று குரல்கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் அரை டஜன் தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்த வெளியீட்டுக்குத் தயார். பாலா இயக்கத்தில் ஜோதிகா, இவானா ஆகியோருடன் இவர் நடித்திருந்த ‘நாச்சியார்’ விமர்சனரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. இதற்கிடையில் இந்திப் படமொன்றில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கியிருக்கிறாராம் பாலிவுட்டின் முக்கிய இயக்குநரான அனுராக் காஷ்யப்.
 

சிரிப்பு போலீஸ்!

கதாநாயகர்களின் நண்பனாகத் துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பிரபலத் தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜெகன். தற்போது ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். காரைக்குடி நாராயணன் கதை வசனத்தில் முழுநீள நகைச்சுவைக் களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் ஜெகனுக்கு ஜோடியாக மோனிகா நடிக்கிறார். சிவகங்கை, சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இதில் பயந்த சுபாவம் கொண்ட சிரிப்பு போலீசாக நடித்து முடித்திருக்கிறார் ஜெகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x