Published : 06 May 2019 11:43 AM
Last Updated : 06 May 2019 11:43 AM
எஸ்யுவி தயாரிப்பில் மஹிந்திரா தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. அந்த வரிசையில் இந்நிறுவனத்தின் டியுவி 300 மாடல் தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சந்தையைக் கலக்க வந்துள்ளது. இதன் விலை ரூ.8.38 லட்சமாகும். இதில் பிரீமியம் மாடலின் விலை ரூ.10.17 லட்சமாகும்.
மேம்படுத்தப்பட்ட இந்த மாடலில் பல புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது டிரைவருக்கு ஏர் பேக் வசதியும், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் எச்சரிக்கை, அதிவேக எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்புறத்தில் கிரில் அமைப்பில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
முகப்பு விளக்கு மற்றும் பகலில் ஒளிரும் விளக்கு (டிஆர்எல்) ஆகியவற்றின் வடிவமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. பின்பக்க விளக்கு, எக்ஸ் வடிவிலான ஸ்பேர் சக்கரம் உள்ளிட்டவை இதில் சிறப்பாக சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக சிறிய அளவிலான ரூப் ஸ்பாயில் உள்ளது.
இதில் அலாய் சக்கரம் கிரே நிறத்தில் வந்துள்ளதைத் தவிர இன்ஜின் செயல்பாடுகளில் மாறுதல் எதுவும் செய்யப்படவில்லை. சிறப்பு ஏற்பாடாக ஹைவே ரெட் மற்றும் மிஸ்டிக் காப்பர் ஆகிய இரு புதிய வண்ணங்களில் இந்த காரை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.
உள்பகுதியைப் பொருத்தமட்டில் ரிவர்ஸ் கேமரா வசதி, 7 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஸ்டீரிங்கிலேயே ஆடியோ வசதி ஆகியன உள்ளன. இது தவிர முன்பக்கத்தில் டிரைவர் மற்றும் பயணிக்கு இருக்கைகள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனால் நீண்ட தூரம் பயணித்தாலும் முதுகு வலிஏற்படாது. இது வழக்கம் போல 100 ஹெச்பி திறன் கொண்ட 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது. 5 கியர்கள் உள்ளன. 4 மீட்டருக்கும் குறைவான அளவிலான எஸ்யுவி ரகமாக இது மட்டுமே உள்ளது.
2015-ம் ஆண்டில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்நிறுவனம் இரண்டாவது முறையாக மேம்படுத்தப்பட்ட மாடலை இதில் அறிமுகம் செய்துள்ளது. பாரத் 6 புகை விதி கட்டுப்பாடு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. அதுவரை இந்த மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட ரகத்தை மஹிந்திரா புகுத்தாது என்றே தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT