Last Updated : 18 May, 2019 01:14 PM

 

Published : 18 May 2019 01:14 PM
Last Updated : 18 May 2019 01:14 PM

மூங்கில் வீடுகள்

கட்டுமானத்துக்கு மூங்கிலைப் பயன்படுத்துவதில் பலவித நன்மைகள் உண்டு. மூங்கில் வெகு வேகமாக வளரக்கூடியது என்பதால் கிடைக்கும் மூங்கில்களுக்குக் குறைவில்லை. மூங்கிலின் விலை குறைவு. மேலும், நம்நாட்டில் மூங்கில் அதிக அளவில் கிடைக்கிறது. மரத்தோடு ஒப்பிடும்போது மூங்கில் அதிக உறுதி கொண்டது.

மூங்கில் அதிகம் விளையும் பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே மூங்கில் கட்டுமானங்கள் உண்டு. மூங்கில்களை முழுமையாகவோ உடைத்தோ மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், நவீன மூங்கில் வீடுகளில் இந்தச் செயல்முறை வேறாக இருக்கிறது. பதப்படுத்தபட்ட மூங்கில் பலகைகளைக் கொண்டு இன்றைக்கு மூங்கில் கட்டுமானம் எழுப்பப்படுகிறது.

முதலில் மூங்கில் என்பது பெரிய மூங்கில் பாய்களாக நெய்யப்படுகின்றன. பிறகு இவை மூங்கில் பலகைகளாக உருவாக்கம் பெறுகின்றன. இந்தப் பலகைகள் எந்த அளவிலும் இருக்கலாம். என்றாலும் பெரும்பாலும் எட்டு அடிக்கு நான்கடி என்றும் அளவில் இவை உருவாக்கப்படுகின்றன.

bamboo-2jpgright

பொதுவாக மூங்கில் என்றாலே எளிதில் தீப்பிடிக்கும். நீரால் எளிதில் பாதிக்கப்படும். கரையான்கள் அரித்து விடும் என்பன போன்ற எண்ணங்கள் பொதுமக்களிடம் நிறைந்திருக்கும். ஆனால், சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு உருவாகும் நவீன மூங்கில் பயன்பாட்டில் இந்தக் குறைகள் நீக்கப்படுகின்றன.

இந்தியாவின் பல பகுதிகளில் மூங்கில் தோட்டப் பயிராக விளைகிறது. இதில் வருங்காலம் இல்லை என்று மூங்கில் கைவினைஞர்கள்கூட அதிலிருந்து விலகியிருக்கும் இந்தச் சூழலில் நவீனக் கட்டுமானத் தொழில்நுட்பம் மூங்கில் விளைச்சலுக்குப் புத்துயிர் அளித்திருக்கிறது.

கான்கிரீட் அதிகக் கரியமில வாயுவை வெளிப்படுத்துவதால் சூழலுக்குக் கேடு என்பவர்கள் மூங்கில் வீடுகளை வரவேற்கலாம். கோஸ்டா ரிகா  (Costa Rica) என்ற நாட்டில் சமீபத்தில் பேரளவு மூங்கில் வீடுகளைக் கட்டி வருகிறார்கள். இதற்கு வேறொரு காரணமும் உண்டு. மூங்கிலில் மீள் தன்மை உண்டு. இதன் காரணமாக புயலோ லேசான நில நடுக்கமோ ஏற்படும்போது, மூங்கில் கட்டிடங்கள் சுதாரித்துக் கொண்டு தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றன.

அஸ்ஸாமில் மிகச் சிறிய மூங்கில் வீட்டை என்பது இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்கத் தொடங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். இரட்டை அடுக்குகளாக உள்ள மூங்கில் வீடு பன்னிரண்டு லட்சம் ரூபாய்.

இந்த மாநிலத்தின் சில பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் உண்டாகும். இங்கு எழுப்பப்படும் மூங்கில் வீட்டின் தரைப்பகுதியும் மூங்கிலால் ஆனது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு படகு ஒன்றும் இருக்கும். வெள்ளம் உண்டாகும்போது அந்தப் படகில் ஏறி பாதுகாப்பான பகுதிக்குச் சென்று விடுவார்கள்.

வெள்ளம் வடிந்தபின் மீண்டும் வீட்டுக்கு வருவார்கள். அவர்களது முக்கியப் பொருள்களெல்லாம் மூங்கில் லாஃப்டில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக இருக்கும். இந்த வீட்டின் கூரை பத்து வருடங்கள் வரை தாக்குப் பிடிக்குமாம். வருங்காலத்தில் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்பதோடு ‘கட்டுமானத்துக்கு உதவிய மூங்கில்களே’’ என்று சிலர் பாடக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x