Last Updated : 07 May, 2019 11:03 AM

 

Published : 07 May 2019 11:03 AM
Last Updated : 07 May 2019 11:03 AM

பொறியியல் கலந்தாய்வுக்குத் தயாரா?

பொறியியல் விண்ணப்பம், கலந்தாய்வு போன்றவற்றைக் கடந்த பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் திறம்படச் செயல்படுத்தி வந்தது. இந்த ஆண்டுமுதல் அவற்றைத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. 2019-20-ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பொறியியல் இடங்கள் இணையவழிக் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன.

இணையதள வசதி இல்லாதவர்கள் தங்களது பகுதியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவுசெய்யலாம். இதற்காகத் தமிழகம் முழுவதும் 42 இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி

பிளஸ் 2-வில் கணிதம்,  இயற்பியல்,  வேதியியல் போன்ற பாடப் பிரிவுகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம் செலுத்தும் முறை

விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகச் செலுத்தலாம்.

ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத விண்ணப்ப தாரர்கள் ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை’ (‘The Secretary, TNEA’ Payable at Chennai) என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம்.

வரைவோலை  01.05.2019 -க்குப் பிறகு பெற்றதாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தில் அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஏனெனில், அந்த சேவை மையத்தில்தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.

 கூடுதல் தகவல்களுக்கு 044 22351014, 22351015 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், சாதிச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான வேண்டுதல், பதிவுக் கட்டணம், ஆதார் விவரங்கள், பெற்றோர் ஆண்டு வருமானம், பள்ளி விவரங்கள், பிளஸ் 2 தேர்வு எண், பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல் ஆகியவற்றை விண்ணப்பிக்கும்போது இணைக்க வேண்டும்.

தேவையான முன்னேற்பாடுகள்

இணையதள முகவரியில் உள்ளே சென்றதும் மாணவர்கள் முதலில் உள்நுழைவுப் பெயர் (username), கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மாணவர்கள் தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் பிளஸ் 2வரை), பெற்றோர் பற்றிய விவரம் ஆகியவற்றைப் பதிவுசெய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு செல்போன் எண், சுய மின்னஞ்சல் முகவரி ஆகியன அவசியம். அந்த எண்ணுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கும்தான் ரேண்டம் எண், தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வுக்கான நாள் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.

தேவையான சான்றிதழ்கள்

தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவுசெய்தால் போதும். எவ்விதச் சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநில மாணவர்கள் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் மகன் / மகள், விளையாட்டு வீரர், மாற்றுத் திறனாளி என்றால் அதற்குரிய சிறப்புச் சான்றிதழ் கட்டாயம் தேவை. பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழும் சாதிச் சான்றிதழும் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணைப் பதிவு செய்யலாம்.

முதல் தலைமுறைப் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்றை அவசியம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்குரிய உதவித்தொகை பெற முடியும்.

சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 6 முதல்  11வரை நடைபெறும். இந்தப் பணி அரசின் 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். அப்போது  விண்ணப்பப் பதிவை விண்ணப்பதாரர் சேவை மையத்துக்கு நேரில் சென்று சான்றிதழ்களைச் சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

தரவரிசைப் பட்டியல்

ஜூன் 17 அன்று தரவரிசைப் பட்டியல் www.tneaonline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் அது அனுப்பப்படும். தரவரிசைப் பட்டியலின்படி, ஜூலை 3 முதல் 30வரை கலந்தாய்வு நடைபெறும்.

மாணவர்களின் தரவரிசை எண்ணுக்கு ஏற்ப எந்த தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும்  அனுப்பப்படும். மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்புக் கலந்தாய்வு ஜூன் 20 முதல் 22 வரை நடைபெறும்.

இது சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நேரடியாக நடைபெறும். பொதுப் பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழிக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

 

முக்கிய தேதிகள்

# ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.05.2019

# ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 03.06.2019

# தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நாள்: 17.06.2019

# மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் நாள்: 20.6.2019

# (Vocational) நேரில் கலந்தாய்வு தொடங்கும் நாள்: 25.06.2019

# (Vocational) நேரில் கலந்தாய்வு முடியும் நாள்: 28.06.2019

# (Academic) இணையத்தில் கலந்தாய்வு தொடங்கும் நாள்: 03.07.2019

# (Academic) இணையத்தில் கலந்தாய்வு முடியும் நாள்: 28.07.2019

# ஒட்டுமொத்தக் கலந்தாய்வு முடியும் நாள்: 30.07.2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x