வேலை வேண்டுமா? - மத்திய அரசு நிறுவனங்களில் பணி

வேலை வேண்டுமா? - மத்திய அரசு நிறுவனங்களில் பணி
Updated on
1 min read

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்களில் பல்நோக்கு பணியாளர் (Multi Tasking Staff) காலிப் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வானது ஆன்லைன்வழியில் நடைபெறும். முதல் தாள் அப்ஜெக்டிவ் வடிவில், இரண்டாவது தாள் விரிவாக விடையளிக்கும் வகையில் (Descriptive Paper) அமைந்திருக்கும்.

முதல் தாளில் பொது ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும்.

ஒன்றரை மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். 100 மதிப்பெண். இத்தேர்வு ஆகஸ்டு 2 முதல் செப்டம்பர் 6 வரை பல்வேறு கட்டங்களாக ஆன்லைனில் நடத்தப்படும். இரண்டாம் தாளில் ஆங்கிலம் அல்லது தமிழ் உள்ளிட்ட 23 பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் சிறு கட்டுரை அல்லது கடிதம் எழுத வேண்டும். தேர்வு நேரம் 30 நிமிடங்கள்.

முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நவம்பர் 17-ம் தேதி 2-ம் தாள் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெற்றால் போதும். முதல் தாள் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும்.

தகுதியுடையவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் (www.ssc.nic.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையம், தேர்வுக்குரிய பாடத்திட்டம் போன்ற விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

முக்கியத் தேதிகள்

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 மே 2019

முதல் தாள் தேர்வு: 02/08/19 – 06/09/19

இரண்டாம் தாள் தேர்வு: 17/11/19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in