Published : 05 May 2019 04:00 PM
Last Updated : 05 May 2019 04:00 PM
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் கிராமத்தில் உள்ள எங்கள் பள்ளியில் 21 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஆனாலும், மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம், விழாக்கள் என எப்போதும் ஏதாவது ஒரு விழாவைக் கொண்டாடிக்கொண்டே இருப்போம்.
ஒவ்வொரு நிகழ்வின்போதும் பழம் சாப்பிட, குளிர்பானம் பருக, கேக் சாப்பிட போன்றவற்றுக்கு பிளாஸ்டிக் அல்லது அட்டையிலான தட்டு, டம்ளர் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஒவ்வொரு முறையும் செலவு செய்ய வேண்டியிருப்பதோடு சூழலும் கெடுகிறது.
இதைத் தவிர்க்க எவர்சில்வர் பாத்திரங்களை வாங்க நினைத்தோம். அதைக் கல்விச்சீர் ஆலோசனைக் கூட்டத்தில் தேவைப்படும் பொருளாகவும் கூறினோம். சிறிய தட்டு, பெரிய தட்டு, டம்ளர் ஆகியவற்றை மூன்று பெற்றோர் வாங்கி வந்தனர். இப்போது அவற்றைப் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதித்த சில வாரங்களுக்கு மட்டுமே மக்களும் கடை உரிமையாளர்களும் அதைக் கடைப்பிடித்தார்களோ எனத் தோன்றுகிறது. இப்போது எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகளின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. சிறு சிறு கடைகளில் தொடங்கி பெரிய மால்கள்வரை மீண்டும் அவை விஸ்வரூபமெடுத்துவிட்டன. இன்னும் சில கடைகளிலோ துணிப்பை என்கிற போர்வையில் செயற்கை இழையால் உருவாக்கப்பட்ட பைகளை விநியோகிக்கின்றனர்.
எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்துவதோடு தொடர்ந்து கண்காணிக்குபோதுதான் இலக்கை அடைய முடியும் என்பதற்கு பிளாஸ்டிக் தடை சிறந்த உதாரணம். பெரிய வணிக நிறுவனங்களில் மக்கக்கூடியது, சூழலுக்கு உகந்தது என்பது போன்ற அடைமொழிகளோடு விநியோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் உண்மையாகவே சூழலுக்கு உகந்தவையா என்ற சந்தேகமும் எழுகிறது.
மளிகைப் பொருட்கள், இட்லி தோசை மாவு போன்றவற்றை அடைத்து விற்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகள் இந்தத் தடைக்குள் வராதா? அவை எல்லாமே மக்கும் தன்மை கொண்டவையா? வீடுகளில் பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பைகளைவிட மாதந்தோறும் இப்படி மளிகைப் பொருட்கள் வாயிலாகச் சேரும் குப்பையே அதிகம். இ
தற்கு எப்போது தடை விதிக்கப்போகிறார்கள்? பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் கடைவிரித்த பிறகே இந்த நிலை. முன்பெல்லாம் நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் பலசரக்குக் கடைகளில்தான் பொருட்களை வாங்குவோம். அரிசி, பருப்பு போன்றவற்றைத் துணிப் பைகளிலும் மற்றவற்றைச் சிறு சிறு காகிதப் பொட்டலங்களாகவும் வாங்கி வருவோம்.
பருவம் தப்பிப் பெய்கிற மழையும் மண்ணுக்குள் புகாதவாறு பிளாஸ்டிக் கழிவுகளே அடைத்து நிற்கின்றன. பிறகு எப்படி நிலத்தடி நீர் மட்டம் உயரும்? தண்ணீர்ப் பற்றாக்குறை எப்படித் தீரும்? தடை என்றால் அனைத்துக்கும் தடை விதிப்பதோடு அதைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்தானே?
- தேவி, சென்னை.
பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT