Published : 20 Apr 2019 12:49 PM
Last Updated : 20 Apr 2019 12:49 PM

கற்பக தரு 49: பனையோலை முகவரி அட்டைகள்

பனையோலை இன்று முக்கிய வணிகப்பொருளாகி இருக்கிறது.  ஞெகிழிப் பொருளுக்கான தடை, இயற்கை ஆர்வலர்களின் விழிப்புணர்வுப் பிரச்சாரம் போன்றவற்றால் பனை ஓலைக்கான தேவை கூடியிருக்கிறது. பனை ஓலைக்கான விலையும் தங்கத்தைப் போல ஏறுமுகமாகிவருகிறது. ஓலைகளைப் பிரித்து அதைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்துவது ஒரு தனித்திறமை. ஓலைகளை அளவுகளுக்கேற்ப பிரிப்பதும் வீணாகாமல் அதன் சிறு துகள் வரை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம்.

நவீனச் சந்தையில் தாக்குப்பிடிக்கும் வண்ணம் செய்யப்படும் பனையோலைப் பொருட்களுக்குச் சர்வதேசச் சந்தை திறந்தே இருக்கிறது. அவ்வகையில், பனை ஓலைகளைக் கொண்டு செய்யப்படும், முகவரி அட்டைகள் (விசிடிங் கார்டுகள்) பெருத்த வரவேற்புப் பெற்று வருவது கண்கூடு. குருத்தோலைகளைத் தேர்ந்தெடுத்து, நல்ல முறையில் காயவைத்து, தேவையான அளவுகளில் வெட்டிச் சீராக்கிப் பக்குவப்படுத்தி, தேவையான தகவல்களை இட்டு நிரப்பி, ஸ்கிரீன் பிரிண்டிங் என்ற முறையில் அச்சடித்துக் கொடுக்கிறார்கள். முன்னாள் பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன் தொடர்ந்து தனது முகவரி அட்டையைப் பனை ஓலையிலேயே செய்துவருகிறார்.

நேரம் எடுத்துக்கொள்ளும் இவ்விதப் பணியைச் செய்வதற்கு, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, பொறுமை ஆகிய பண்புகள் அவசியம். மென்பொருள் துறையில் பணிபுரியும் இளவேனிலும் இயற்கை வேளாண்மை செய்யத் தனது வங்கிப் பணியைத் துறந்த சாமிநாதனும் இணைந்து ‘பனையேற்றம்’ எனும் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த அமைப்பு மனிதர்களைப் பாரம்பரிய முறையில் பனை ஏறச்செய்யும் ஒரு முன்னெடுப்பை எடுத்துவருகிறது. பனை மீது மனிதர்கள்  ஏறத் தொடங்குவதே பனை குறித்து அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு என்பது அதன் நிலைப்பாடு. ஒருங்கிணைந்த வகையில் பனைத்தொழில் கற்குமிடமாகப் பனையேற்றம் ஆக வேண்டும் என்கிற விருப்பத்தில் இளைஞர்கள் இருவரும் செயல்படுகிறார்கள். அதன் முதற்படியாக ஓலையில் முகவரி அட்டை என்கின்ற ஒரு சிறந்த வடிவமைப்பை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

கிராமப்புறப் பெண்களுக்கும் தொழில்வாய்ப்பைப் பெருக்கும் வகையில் இவர்கள் செய்யும் இந்த முயற்சி இன்னும் பல மக்களைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்தில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள ம. கல்லுப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து செயல்படுகிறார்கள். இத்தொழிலில் ஈடுபட விரும்புவோர், ஆர்வமுள்ளவர்கள், கற்றலில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தேவையான பயிற்சியையும் வழங்குகிறார்கள் (‘பனையேற்றம்’ அமைப்பைத் தொடர்புகொள்ள: 8012325499).

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x