Last Updated : 30 Apr, 2019 12:07 PM

 

Published : 30 Apr 2019 12:07 PM
Last Updated : 30 Apr 2019 12:07 PM

வலை 3.0: வாசமில்லா வலைக் காலம்!

ஆய்வுத் திட்டமாகத் தொடங்கிய இணையம் தொழில்நுட்ப நோக்கில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தி வளர்ச்சி கண்டுவந்தது. ஆனாலும், அது முக்கிய வரம்புக்குள் இருந்தது. பொதுமக்கள் மத்தியில் நன்கறியப்பட்டதாக அது இருக்கவில்லை.

அதன் பயனர்களுக்கு அத்தனை நட்பானதாகவும் இருக்கவில்லை. இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமெனில் எவரும் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்தது. அதற்குக் குறைந்தபட்ச தொழில்நுட்பப் பரிச்சயம் தேவைப்பட்டது.

அந்நியமான இணையம்

1990-களின் தொடக்கத்தில் வலையின் அறிமுகம்தான் இதை மாற்றியது. அதற்கு முன்புவரை இணையம் பெரும்பாலும் ஆய்வாளர்களாலும் கல்வியாளர்களாலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் தவிர ‘கீக்’ எனக் குறிப்பிடப்படும் தொழில்நுட்பப் பித்தர்கள் இணையத்தை ஆர்வத்துடன் பயன்படுத்தினர்.

இணையத்தைப் பயன்படுத்தத் தேவையான நுணுக்கங்களை அவர்கள் இயல்பாகக் கற்றுக்கொண்டார்கள். மற்றபடி சாமானியர்களுக்கு நெருக்கமானதாக இணையம் இன்னமும் உருவாகியிருக்கவில்லை.

இந்த இடத்தில், ஆரம்ப கால இணையத்தில் அப்படி என்னதான் இருந்தது எனும் கேள்வி எழலாம். இன்றளவும் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவையான மின்னஞ்சல் அறிமுகமாகியிருந்தது. ஆனால், ஆரம்ப கால மின்னஞ்சல் எளிதாகப் பயன்படுத்தக்கூடியது எனக் கூற முடியாது.

கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்தது. கோப்புகளையும் தகவல்களையும் தேடும் வசதியும் இருந்தது. ஆனால், இணையத்தைப் பயன்படுத்துவதற்கான வழிகள் சிக்கலானதாகவே இருந்தன. பெரும்பாலும் வரி வடிவங்களும் அட்டவணையுமே ஆதிக்கம் செலுத்தின.

சமூக ஊடகங்களுக்கு முன்னோடி

இவை தவிர ‘பிபிஎஸ்’ எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் ‘இணைய தகவல் பலகை முறை’யான ‘புல்லட்டின் போர்டு சிஸ்டம்’ (bulletin board system) முறை 1978-ல் அறிமுகமானது. தகவல் பலகைக்கு மட்டும் அல்ல, இன்றைய சமூக ஊடக சேவைகளுக்கும்கூட இவைதான் முன்னோடி. தொலைபேசி இணைப்பு, மோடம் வழியே இந்தத் தகவல் பலகை வசதியை அணுகி, செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதும் சாத்தியமானது.

இத்தகைய தகவல் பலகை சேவைகள் எண்ணற்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. இந்த வசதியை மையமாகக்கொண்டு செய்திக் குழுக்களும் விவாதக் குழுக்களும் உருவாக்கப்பட்டன. யூஸ்நெட் குழுவும், வெல் (WEL ) விவாத அமைப்பும் இவற்றில் புகழ்பெற்றவை. இணையத் தொடர்புகள் மூலமே மெய்நிகர் சமூகத்தை உருவாக்கிக்கொள்ளும் சாத்தியத்துக்கான முன்னோடி உதாரணங்களாக இவை அமைந்தன.

தகவல் பலகை சேவையையொட்டி, ஐஆர்சி சாட் எனப்படும் இணைய அரட்டை வசதியும் அறிமுகமானது. இந்த சேவைகளின் நீட்சியாகவே இன்றைய ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் இன்னும் பிற சேவைகளும் திகழ்கின்றன. இணையத்தை அணுகுவதற்கான சேவை அளிக்கும் நிறுவனங்களும் உருவாகியிருந்தன.

முதலில் டயலாக், பின்னர் புரோடிஜி, கம்ப்யூசர்வ் போன்ற நிறுவனங்கள் இணையத்தை அணுகும் வசதியை ஒரு சேவையாக அளித்தன. இணையம் வழியே செய்தி, தகவல்களை அறிந்துகொள்வது உள்ளிட்ட வசதிகளை இவை வழங்கின.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர்

தொடர்புக்கு:enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x