Last Updated : 17 Apr, 2019 12:11 PM

 

Published : 17 Apr 2019 12:11 PM
Last Updated : 17 Apr 2019 12:11 PM

இடம் பொருள் மனிதர் விலங்கு: அம்மாவின் உலகம்

‘உன்னை ஒருமுறை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. எப்படி இருக்கிறாய், மோனே? எப்போது என்னைப் பார்க்க வருவாய்? வேலை, வேலை என்று சாப்பிடாமல் இருந்துவிடாதே. வெயிலில் அலையாதே. உடலை ஒரேயடியாக வருத்திக்கொள்ளாதே. என்னை மறந்துவிடவில்லை அல்லவா? உன்னை உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. எப்போது வருவாய், மோனே? இப்போதே பார்க்க வேண்டும் போலிருக்கிறது.’

கடிதத்தைப் பிரிக்க வேண்டிய அவசியமே இருக்காது பஷீருக்கு. அம்மா என்ன எழுதுவார் என்று அவருக்குத் தெரியும். உன்னைப் பார்க்க வேண்டும் என்று தொடங்கி, உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி முடிப்பார். வாரம் ஒரு கடிதம். பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும். அதே பல்லவி. அம்மா மாறமாட்டார்.

அம்மாக்கள் மாறுவதில்லை. அது அவர்கள் இயல்பில் இல்லை. மோனே, மோனே என்று கிடந்து உருகிக்கொண்டிருப்பார்கள். உம்மா, இன்று ஆசிரியர் என்னைப் போட்டு அடித்துவிட்டார் என்று சிணுங்கினால், கன்னம் சிவக்க அம்மா அழுவார். எங்கே, எங்கே என்று கையையும் காலையும் திருப்பிப் திருப்பிப் பார்ப்பார். குறும்பு செய்த நான் அம்மாவின் மடியில் ஒயிலாகப் படுத்துக்கிடப்பேன். ‘ஒரு பாவமும் அறியாத குட்டியை’ இம்சித்த ஆசிரியர் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார்.

”உம்மா, இன்று என்னாச்சு தெரியுமா? காந்தி ஒரு வண்டியில் சென்றுகொண்டிருந்தார். நல்ல கூட்டம். அடித்துப் பிடித்து ஓடிச் சென்று அவர் வண்டியில் ஏறி, அவர் கையைத் தொட்டுவிட்டேன். இதோ இந்தக் கையால்” என்று கத்தினால், அம்மா கவலை தோய்ந்த முகத்துடன் என்ன சொல்வார் தெரியுமா? ஏன் இப்படி எல்லாம் தாவி ஓடுகிறாய்? கீழே விழுந்தால் என்னாகும்?

காந்தி வரட்டும், செல்லட்டும். வைக்கம் குலுங்கட்டும், அதிரட்டும். பிரிட்டிஷ்காரர்கள் இருக்கட்டும், போகட்டும். ‘நீ கவனமாக இரு மோனே!’ அம்மாவின் உலகம் ரொம்பவும் சிறியது. அதில் நான் மட்டுமே முழுக்க நிறைந்திருக்கிறேன். அந்த உலகை அம்மா தனது அன்பால் எப்போதுமே கதகதப்பாக வைத்திருப்பார்.

ஆனால், என் உலகம் வளர்ந்துகொண்டே இருந்தது. நாடு முழுவதிலும் வேக வேகமாகப் பரவிக்கொண்டிருந்த போராட்டத் தீ என்னையும் பற்றிக்கொண்டது. ஊரே, உலகமே வீதிகளில் திரண்டு நிற்கும்போது நான் மட்டும் வீட்டுக்குள் அடைந்துகிடந்தால் நாலு பேர் சிரிக்க மாட்டார்களா? உம்மா, நானும் காந்தியைப்போல், நேருவைப்போல் நாட்டுக்காகப் போராட விரும்புகிறேன் என்று சொன்னால், சரி போய் வா மோனே என்று ஒருபோதும் அம்மா வழியனுப்பி வைக்கப் போவதில்லை. எனவே, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன்.

கால் போன போக்கில் நடந்தேன். கிடைத்த வேலைகளைச் செய்தேன். அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டேன். பிரிட்டிஷ் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று தொண்டை நரம்புகள் புடைக்க கத்தினேன். ஊர்வலங்களில், பேரணிகளில் என்னைப் பார்க்கலாம். வீதிப் போராட்டங்களில் என்னை நீங்கள் பார்க்கலாம். வெயில், மழை, பசி, தாகம் என எதுவும் என்னைப் பாதிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பழகிப் போயிருந்தேன். பின்னாளில் கதைகளும் நாவல்களும் எழுதுவதற்கான அனுபவமும் பயிற்சியும் நிறையவே கிடைத்தன. உம்மா, என்னை நினைத்துக் கவலைப்படாதே என்று பல மாதங்களுக்குப் பிறகு அம்மாவுக்குக் கடிதம் போட்டேன்.

எதிர்பாராத ஒரு நாளில் என்னைச் சிறையில் தள்ளினார்கள். போட்டு, அடிஅடியென்று அடித்தார்கள். புழு, பூச்சியைப்போல் பூட்ஸ் காலால் மிதித்தார்கள். செம்பு பாத்திரத்தைக் கோலால் தட்டினால் ஒரு சத்தம் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அப்படிச் சத்தம் வரும்வரை ‘கான்ஸ்டபிள் 270’ என்னை விடாமல் அடித்தார். ‘ஏன் உன் டைரியில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, அரபி என்று பல மொழிகளில் என்னென்னவோ எழுதி வைத்திருக்கிறாய்? நீ உளவாளியா?’ என்று கேட்டு அவர் அடித்தார். நான் ஓர் எழுத்தாளன் என்று பலமுறை கத்தினாலும் புரியவில்லை.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு என்னை வெளியில் விட்டார்கள். உடல் சோர்ந்து போயிருந்தது. தோளும் கையும் காலும் வலித்தன. பசித்தது. நேராக வண்டி பிடித்து ஊருக்குப் போய், கதவைத் தட்டினேன். நள்ளிரவு. கிராமமே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.

யாரு என்று கேட்டபடி கதவைத் திறந்தார் உம்மா. என்னைப் பார்த்ததும் அந்த இருளிலும் அவர் கண்கள் மின்னின. விளக்கு ஏற்றினார். ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டுவந்து கொடுத்தார். கையை, காலைக் கழுவிக்கொண்டு வா, மோனே!

தரையில் அமர்ந்ததும் தட்டில் சாதம் போட்டுக் கொண்டுவந்து வைத்தார். நான் அமைதியாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். எங்கே போனாய்? ஏன் சொல்லாமல் போனாய்? என்னை இப்படித் தவிக்க விடலாமா? இப்போதாவது அடங்கியிருப்பாயா அல்லது மீண்டும் போராட்டம், அது இதுவென்று ஓடிவிடுவாயா? ஒரு கேள்வியும் இல்லை உம்மாவிடம். ‘இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கட்டுமா, மோனே?’

‘ம்’ என்று தலையாட்டிய பிறகுதான் நினைவு வந்தது.“உம்மா, நான் இன்று வருவேன் என்று சொல்லவில்லையே. எப்படிச் சாதம் மிச்சம் வைத்திருந்தாய்?’’

‘ஓ, உனக்கும் சேர்த்தே சமைத்துவிட்டு, ஒவ்வொரு இரவும் காத்திருப்பது வழக்கம். இன்று நீ சரியாக வந்துவிட்டாய், மோனே!’

(கேரளாவைச் சேர்ந்த வைக்கம் முகமது பஷீர், பிரபல எழுத்தாளர்.)

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x