Last Updated : 05 Apr, 2019 11:34 AM

 

Published : 05 Apr 2019 11:34 AM
Last Updated : 05 Apr 2019 11:34 AM

இயக்குநர் மகேந்திரன்: அழகியல் திரைப்பட ஆசான்

தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன.

அளவுக்கு மீறித் தான் புகழப்பட்டு விட்டோமோ என அவரே கூச்சப்பட்டுப் பேசியிருக்கிறார். ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரைப் புகழ்ந்துபேசுவது ஒருவகையான போதை. அதை அவர்கள் தவிர்க்க நினைத்தாலும் அந்தப் போதையில் அவர்களுக்கு ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கும் ரசிகரின் உதிரத்தின் அணுக்களில் கலந்துவிட்ட பெயர்கள் ‘முள்ளும் மலரு’மும்  ‘உதிரிப்பூக்க’ளும் ‘மெட்டி’யும் ‘ஜானி’யும் ‘நண்டு’ம்  இன்ன பிற படங்களும்.

பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதித் தள்ளிய பின்னரே அவர் இயக்குநராக அரிதாரம் பூசிக் கொண்டார். சிவாஜி கணேசனின் ‘தங்கப்பதக்கம்’ அதில் இடம்பெற்றிருந்த வசனங்களுக்காகவே அறியப்பட்டது. அப்படியான மனிதர் முதன்முறையாக இயக்குநராக அவதாரமெடுத்த ‘முள்ளும் மலரும்’ காட்சி மொழியில் புது இலக்கணம் வகுத்தது. அதன் பின்னர் அவர் யதார்த்த சினிமாவின் நாயகன் எனக் கொண்டாடப்படுகிறார். அவர் யதார்த்த சினிமாவை உருவாக்கினாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், அவர் அழகியல் சினிமாக்களை உருவாக்கினார்.

அவரது முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தையே எடுத்துக்கொண்டால் அது ஒரு யதார்த்த படம் அன்று. அது முழுக்க முழுக்க அழகியல் சினிமாதான். கையை இழந்துவிட்டு அண்ணன் வந்து நிற்கும் ஒரு காட்சி போதும் அது அழகியல் சினிமா என்பதைப் புரிந்துகொள்ள.  கையில்லாமல் வந்து நிற்கும் அண்ணனைப் பார்த்து விக்கித்துப்போய் நிற்பார் தங்கை. அண்ணனோ “என்னடா ஆச்சு? ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்லடா… ஒண்ணும் இல்ல” எனும் வசனங்களை மட்டுமே பேசுவார்.

azhagiyal-2jpg

 யதார்த்தத்தில் எந்த அண்ணனும் தங்கையும் அப்படிப் பேசிக்கொள்வார்களா? ஆனால், படத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது அற்புதமானதாகத் தெரியும். அந்தக் காட்சியின் கதாபாத்திர உணர்வுகளை ரசிகருக்கு நடிப்பின் வழியாகவும் இசையின் வழியாகவும் ஒளிப்பதிவின் வழியாகவும் இயக்குநர் உணர்த்தியிருப்பார். இந்தத் தன்மை அதுவரையான தமிழ் சினிமாவின் பாதையிலிருந்து விலகி யிருந்தது.

அதுதான் ‘மகேந்திரனின் பாதை’ யாக அதன் பின்னால் உருவெடுத்தது. உணர்வுமயமான தருணங்களை அறிவின் தளத்தில் வைத்து அலசிப் பார்ப்பதில் அலாதி ஆனந்தமடைந்தவர் அவர். அதனால்தான் அவற்றை யதார்த்தப் படமா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியதிருக்கிறது.

அவரது படங்களில் திரையில் காட்சி கள் அமைக்கப்பட்ட விதமும் நடிகர்கள் வருவதும் போவதும் வசனங்களைப் பேசுவதும் ரசனைக்குரியவையாக மாறியிருந்தன. அவற்றில் காணப்பட்ட அழகில் சொக்கிப்போயிருந்தனர் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்.  அதுவரை பெரிதாக மலராமல் கிடந்த தமிழ் சினிமாவின் மலர்ச்சிக்குக் கைகொடுத்தவர் என்ற வகையில் தொடர்ந்து ஆராதிக்கப்படுகிறார் மகேந்திரன்.

அவரது பாடல்களில் காணப்படும் மாண்டேஜ் காட்சிகளும் அவர் எந்த அளவுக்கு சினிமாவில் அழகுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைத் துல்லியமாக உணர்த்துகின்றன. ஆனாலும், சினிமாவில் பாடல்களின் இடம் குறித்து அவருக்குப் பலத்த ஆட்சேபகரமான கருத்துகள் இருந்தன என்பதும் உண்மை. அவருக்குப் பின் வந்த மணிரத்னம், ஷங்கர், வஸந்த் போன்ற பல இயக்குநர்களின் படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பான இடத்தைப் பெற்றதற்கு மகேந்திரன் பெரிய உந்துதலாக இருந்திருக்கக்கூடும். 

உரையாடல் என்ற உறைநிலை சினிமாவில் இவரது பாதம் பட்ட பிறகு தான் அது உயிர் தரித்துக்கொண்டது. அவரது படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாள்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கலாம். திரைத் துறையின் நண்பர்கள் சந்தித்து அளாவளாவும்போதெல்லாம் அந்த இடத்தில் மகேந்திரன் பெயரோ அவரது படங்களின் பெயரோ அவர் படைத்த கதாபாத்திரங்களது பெயரோ இடம்பெறாமல் போகாது என்று சொல்லும் அளவுக்கு மகேந்திரன் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறார்.

 ஆனாலும், இந்தியத் தரத்துடனும் உலகத் தரத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்தால் மகேந்திரனின் இடம் பெருமைப்படும் அளவுக்கான உயரத்தில் இல்லை. அதே நேரத்தில் நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் மகேந்திரன் அழுத்தமான அத்தியாயங்களை எழுதிச் சென்றிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது.

அவருக்குக் குடும்பம் என்ற அமைப்பின்மீது அநேகக் கேள்விகள் இருந்துள்ளன என்ற முடிவுக்கு நாம் வருவதற்கான சாத்தியங் களைக் கொண்டவை அவரது ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ போன்ற பெரும்பாலான படங்கள். மரபு, குடும்பம், திருமணம், ஆணாதிக்கம், பெண்களின் துயரம் இவற்றைப் போன்ற விஷயங்களைத் தான் அவர் தொடர்ந்து படைத்திருக்கிறார்.

azhagiyal-3jpgஉதிரிப்பூக்கள்right

அவற்றைக் கருவாகக்கொண்டே அவரது படைப்புகள் உருவாகியிருக்கின்றன. தந்தைமீது சினம் கொண்ட தனயர்களையும், அன்பு கொண்ட காரணத்தால் அவதிக்கு ஆளாகும் பெண்களின் துயரத்தையும் அவருடைய படங்களில் நாம் அதிகமாக எதிர்கொள்ள முடிகிறது.

பெரிய குடும்பத்தின் இனம்புரியாத அரூப சோக இழையைத் தேர்ந்தெடுத்து அதில் கதாபாத்திரங்களைக் கோத்துப் படங்களாக்கியிருக்கிறார் மகேந்திரன். அவரது முதன்மைக் கதாபாத்திரங்கள் குடும்பங்களைப் புறக்கணித்தவை அல்லது குடும்பங்களால் துரத்திவிடப்பட்டவை. குடும்பத்திலிருந்து அல்லது ஒரு கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் மனநிலையில்தான் அவர் படங்களை உருவாக்கியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

‘மெட்டி’ திரைப்படத்தில் தந்தை மீது வெறுப்புக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவருகிறார் பட்டாபி. இது தமிழ்நாட்டில் நடைபெறும் கதை. இதே போல் ‘நண்டு’ திரைப்படத்தில் லக்னோவிலிருந்து தகப்பன் மீது கோபம் கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார் அதிர்ஷ்டம்கெட்ட நாயகன் ராம் குமார் ஷர்மா.

இந்தியா முழுவதும் குடும்பங்களில் ஆணாதிக்கத் திமிர் கொண்ட தந்தைகள்தாம் இருந்திருக்கிறார்கள் என்று இதை நாம் புரிந்துகொள்ள சாத்தியமிருக்கிறது. மகேந்திரனின் புரிதலும் இதுவாக இருந்திருக்கலாம். குடும்பத்துப் பெண்கள் ஆண்களை எதிர்த்துப் பேச முடியாமலும் அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவர இயலாமலும் தங்களை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினாலும் ஊர்ப் பேச்சுகளிலிருந்து தப்பிக்க வழியின்றித் தங்களை இழந்திருக்கிறார்கள்.

 ‘மெட்டி’யின் கல்யாணி அம்மா தனது கொடுமைக்காரக் கணவனிடமிருந்து விலகி தனியே தன் மகள்களை வளர்த்துவிட்டபோதும், ஊராரது இழிபேச்சுக்கு ஆளாகித் தனது முந்தானையிலேயே தூக்குப்போட்டு இறந்துவிடுகிறார். குடும்பமும் சமூகமும் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு பிற்போக்காக இருக்கின்றன என்பதை உணர்ந்து அந்தப் பிற்போக்குத் தனத்தை உணர்த்துவதற்காகவும் அதை மாற்ற இயலும் கலைப் படைப்பாகவுமே தனது படங்களை உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன் கதை எழுதும் திறமை கொண்டிருந்தவர் என்றபோதும் பிறரது கதைகளைப் படமாக்குவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ தாக்கத்தில்தான் அவர் ‘உதிரிப்பூக்க’ளைப் படைத்தார். நாவலுக்கும் சினிமாவுக்கும் பெரிய வேறுபாடுண்டு.

ஆனாலும், உந்துதலைத் தந்த காரணத்துக்காகவே அதைப் படத்தின் டைட்டிலிலேயே கவனப்படுத்தியவர். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பாலமாக இருந்தவர் மகேந்திரன். அவரது வேர் இலக்கியத்தில் நிலைகொண்டிருந்த காரணத்தாலேயே அவரால் பசுமையான கிளை பரப்பிய உயிர்த்துடிப்பான சினிமாக்களை உருவாக்க முடிந்திருந்தது. அந்த சினிமாக்களின் நிழலில் சினிமா ரசிகர்கள் ஆசுவாசமடைந்துகொண்டே இருப்பார்கள். அந்த நிழல் இருக்கும் வரை மகேந்திரனின் நினைவுமிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x