Published : 19 Mar 2019 11:32 AM
Last Updated : 19 Mar 2019 11:32 AM
ஈ.எஸ்.ஐ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில்மேல்நிலை எழுத்தர் பதவியில் 131 காலியிடங்கள், சுருக்கெழுத்தர் பதவியில் 20 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
தகுதி
மேல்நிலை எழுத்தர் (Upper Division Clerk) பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அடிப்படைக் கணினி அறிவு அவசியம். சுருக்கெழுத்தர் பதவிக்கு பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அதோடு அடிப்படைக் கணினி அறிவும் தேவை. இரு பதவிகளுக்கும் வயது வரம்பு 18 முதல் 27 வரை. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வுமுறை
எழுத்துத் தேர்வு, கணினித் திறன் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். மேல்நிலை எழுத்தர் பதவிக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வு, 2-வது நிலைத் தேர்வு, கணினி திறன் தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்படும்.
முதல் இரண்டு தேர்வுகளிலும் நுண்ணறிவுத் திறன், அடிப்படைக்கணிதம், பொது அறிவு, பொது ஆங்கிலம் ஆகியவை தொடர்பான கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். 3-வதான கணினி திறன் தேர்வு தகுதித்தேர்வு மட்டுமே. அதேபோல, சுருக்கெழுத்தர் தேர்வில் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன்தேர்வு ஆகிய 3 தேர்வுகள் இருக்கும். எழுத்துத்
தேர்வில் பொது ஆங்கிலம், நுண்ணறிவுத் திறன், பொது அறிவு ஆகியவற்றில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் திறன்தேர்வுக்கும் (சுருக்கெழுத்து), கணினித் திறன் தேர்வுக்கும் அழைக்கப்படுவர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.esic.nic.in/recruitment என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15 ஏப்ரல் 2019.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT