Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

செயலி என்ன செய்யும்? 25 - செயலியைக் கட்டுப்படுத்தும் செயலி

மகனோ மகளோ எந்நேரமும் செல்போனை நோண்டியபடியே இருக்கிறார் என்பது இன்றைய தாய்மார்களின் மிகப் பெரும் புலம்பல். அவர்களுக்கு உதவ இன்று சந்தையில் பல செயலிகள் வந்துள்ளன.

APP OFF TIME

சில மணித்துளிகள் மாத்திரம்தான் போனைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இலவசச் செயலி பேருதவியாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் செயலிகளையும் ஒரு பட்டியல்போல் இது காட்டும். அதில் எந்தச் செயலியைக் குறிப்பிட்ட நேரம்வரை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்து தேர்வு செய்யுங்கள்.

பின்பு எவ்வளவு நேரம் என்பதையும் குறிப்பிடுங்கள். சரியாக அந்நேரம் வந்ததும் அந்தச் செயலி இயல்பாகவே மூடிவிடும். பின்பு சில மணி நேரத்துக்கு அந்தச் செயலியை மீண்டும் உங்களால் பயன்படுத்த முடியாது. அதேபோன்று சிறுவர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டையும் இந்தச் செயலியின் உதவியுடன் பெற்றோர் கண்காணிக்கலாம்.

டிஜிட்டல் நலம்

சமீபகாலமாக, பல சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்கள் பயனாளர்கள் எப்படித் தங்களின் டிஜிட்டல் நேரத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்குப் பல உதவிகளைச் செய்து வருகின்றன. நீங்கள் Tik Tok செயலியை அதிக நேரம் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு Tik Tok நிறுவனமே சில உதவிகளைச் செய்கிறது.

Tik Tok செயலியைத் திறந்து செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் டைம் ரெஸ்ட்ரிக்ஷன் எனும் தேர்வை அழுத்தி எவ்வளவு நேரம் நீங்கள் Tik Tok-ஐப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லிவிட்டால்போதும் குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் Tik Tok செயலி தானாகவே அணைந்துவிடும். அதன்பின் 24 மணி நேரம் கழித்துத்தான் Tik Tok செயலி மீண்டும் திறக்கும்.

இதன் மூலம் நீங்கள் Tik Tok செயலியில் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடாமல் எவ்வளவு நேரம் செலவிடலாம் என்பதை நீங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

நான் இந்தப் பகுதியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் ஒரு விஷயம் இலவசமாகக் கிடைக்கிறதே என்று செயலிகளை உங்கள் ஸ்மார்ட் போனில் குவித்துவிடாதீர்கள். இலவசம் என்றாலே அது நிச்சயம் அவர்களுக்கு லாபம் தரும் ஏதோ ஒரு விஷயத்தைக் கொண்டிருக்கும் உங்களுடைய தகவல்கள் என்பது அவர்களுக்கு லாபத்தைக் குவிக்க உதவும் ஒரு வழி.

பல நேரம் சைபர் குற்றங்களுக்குக் காரணமே நம் சோம்பல்தான். டிஜிட்டல் தொழில்நுட்பம் நமக்குப் பல வசதிகளைக் கொடுக்கிறது ஆனால், அதை நாம் விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும். கவனக்குறைவாகவோ சோம்பலாகவோ பயன்படுத்தினால் அதற்குரிய நஷ்டத்தை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான செயலிகள் தரவிறக்கத் தயாராக உள்ளன. செயலிகளைப் பற்றிய இந்தத் தொடரில் என்னால் முடிந்தவரை மிக முக்கியமான செயலிகளைப் பற்றியும் அவற்றின் ஆபத்துகளைப் பற்றியும் அவற்றை விழிப்புணர்வுடன் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இதற்கு நீங்கள் அளித்த வரவேற்பு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நன்றி.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x