Published : 22 Dec 2018 05:47 PM
Last Updated : 22 Dec 2018 05:47 PM

கற்பக தரு 33: வழிகாட்டும் பனையோலை நட்சத்திரம்

பனையோலைகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் நடைமுறை காலம் காலமாக இருந்துவருகிறது. ஓலை என்பதே மங்கலகரமான ஒன்று என்பது மரபின் வழி நம்  மனங்களிலும் நிறுவப்பட்டிருக்கிறது. ஆகவே கலாச்சாரம் சார்ந்து நமது பண்டிகைகளில் ஓலைகளின் பங்கு இன்றியமையாதது. சமயச் சடங்குகளிலும் விழாக்களிலும் பனை ஓலை முக்கியப் பொருளாக இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் பனையோடு தொடர்புடைய மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்வது தென் மாவட்டங்களில்தாம். இவர்கள் குருத்தோலை ஞாயிறு அன்று பனை சார்ந்து சில பொருட்களைச் செய்து பவனியாக எடுத்துச் செல்லுவது வழக்கம். அவ்விதமாக கிறிஸ்தவம் பனைஓலையை முக்கியக் குறியீடாக அமைத்துக்கொண்டுள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன்புகூட கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் ஆலயங்களும் வீடுகளும் பனை ஓலைகளால், மரக்கிளைகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள்கூட, மூங்கில் கம்புகளால்செய்யப்பட்டு நிறுவப்பட்டன. பெரும்பாலும் இன்று நட்சத்திரங்கள் நெகிழியால்செய்யப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. கிறிஸ்துமஸ் மரங்களும் நெகிழியால்செய்யப்பட்டே வருகின்றன. நவீன யுகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடும், சீனப் பொருட்களின் வரவும் அதிகரித்துள்ளன.

இவ்வருடம் குழித்துறை மறைமாவட்டம், பிளாஸ்டிக் இல்லாக் கிறிஸ்துமஸ் கொண்டாட முயற்சிகளை முன்னெடுத்துவருகிறது. திருமறைக் கூற்றின்படி  நட்சத்திரம் ஞானியருக்கு வழிகாட்டியதால், அதை கிறிஸ்துமஸ் காலங்களில் வீடுகளின் முகப்பில் தொங்கவிடுவது வழக்கம். வண்ண விளக்குகள் இட்ட நட்சத்திரங்கள் கிறிஸ்து பிறந்திருக்கிறார் என மகிழ்ந்துஅறிவிக்கும் ஒரு அடையாளச் செயல்பாடு.

காகிதம், நெகிழி ஆகியவற்றால் செய்யப்படும் இந்த நட்சத்திரங்கள், ஒரு வருடப் பயன்பாட்டுக்குப் பின்வீசியெறியப்படுவதைக் காணலாம். ஆகவே இயற்கை சார்ந்த விழா கொண்டாட்டங்கள் தேவை என்பதை அறிவுறுத்தவும் வேண்டி இவ்வருடம் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் அறிமுகபடுத்தப்படுகின்றன.

உள்ளங்கையளவே உள்ள இந்த நட்சத்திரங்கள் உள்ளம் கொள்ளும்அழகு நிறைந்தவை. கன சதுர வடிவில் பின்னப்பட்டு அதன் மீது நட்சத்திர வடிவில் ஓலைகள் குத்கீட்டிகள் என எழுந்து நிற்கும் வீச்சாகட்டும், கோளம் போன்று உ ருண்டு மென் அலை மடிப்புகளாலான வடிவாகட்டும், இரு ஓலைகளைக் கொண்டு சுற்றி வளைத்து மடித்துச் செய்யப்படும் இரு வர்ண ஓலை நட்சத்திரமாகட்டும், சதுர வடிவில் முடைந்து செய்யப்படும் எளிய நட்சத்திரங்கள் ஆகட்டும், இவை அனைத்தும் கண்களை நிறைவுகொள்ள வைப்பவை.

சூழலியல் சார்ந்து பெரிய பங்களிப்பாற்றுபவை. தொழில் சார்ந்து கிராமப்புற மக்களுக்கு வாழ்வளிப்பவை. வழிகாட்டும் நட்சத்திரத்துக்கு இலக்கணமானவை.

வேலூர் சி எம் சி மருத்துவமனை  கிராமப்புரப் பெண்கள் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட ‘ஷேர்’ (SHARE) அமைப்பைச் சார்ந்த சிவசங்கரி இதை செய்துவருகிறார்.

- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x