Last Updated : 19 Sep, 2014 01:46 PM

 

Published : 19 Sep 2014 01:46 PM
Last Updated : 19 Sep 2014 01:46 PM

இயக்கும் கரங்கள்: மீரா நாயர்

யார் இவர்?

உலகின் முன்னணி திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண் இயக்குநர்களில் ஒருவர்.

இந்திய ஆங்கிலத் திரைப்படங்கள்-ஹாலிவுட் திரைப்படங்கள் இரண்டையும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இயக்குபவர். அவரது முதல் திரைப்படமான ‘சலாம் பாம்பே', ஆஸ்கரின் வெளிநாட்டுப் படங்கள் பிரிவுக்கு இந்தியாவிலிருந்து தேர்வான படம். திரைப்பட இயக்கங்கள், திரை மாணவர்களுக்கான பட்டியலில் இன்றைக்கும் அவசியம் இடம்பெறும் படம். அமெரிக்காவில் இயங்கினாலும், தன் படங்களில் அமெரிக்காவை விமர்சனத்துக்கு உட்படுத்தி இருக்கிறார் மீரா.

பின்னணி

ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவில் பிறந்த மீரா டில்லி பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் சமூகவியல் பயின்றிருக்கிறார்.

முதல் அடி

நியூயார்க் சென்று குறும்படங்கள் இயக்க ஆரம்பித்தார். மும்பையின் காபரே நடனங்கள் தொடர்பாக ‘இந்தியன் காபரே’ என்ற முதல் ஆவணப் படத்துக்கு 1988-ல் அமெரிக்கத் திரை விழா பரிசைப் பெற்றார்.

‘சலாம் பாம்பே’ மும்பையின் தெருவோரக் குழந்தைகள் உலகத்தைச் சித்தரிக்கும் படம். மதிப்புமிக்க கான் (Cannes)திரைப்பட விழாவில், ஓர் இயக்குநரின் சிறந்த முதல் படத்துக்கு வழங்கப்படும் கேமரா டி’ ஓர் விருதுடன், மேலும் 25 விருதுகளைப் பெற்றது.

முக்கியப் படைப்புகள்

அமெரிக்காவில் சாலையோர மோட்டல் நடத்த உகாண்டாவிலிருந்து செல்லும் இந்தியக் குடும்பம் பற்றிய ‘மிசிசிபி மசாலா' திரைப்படம், வெனிஸ் திரைவிழாவில் 3 விருதுகளைப் பெற்றது.

சலாம் பாம்பே, மிசிசிபி மசாலா படங்களுக்கான திரைக்கதையை மீராவுடன் இணைந்து எழுதியவர் சோனி தாராபூர்வாலா.

பிரம்மாண்டப் பஞ்சாபி திருமணத்தின் பின்னணியில் அந்தச் சமூகத்தில் நிலவும் மூடத்தனங்கள், குறிப்பாகக் குழந்தை பாலியல் வல்லுறவு போன்று வெகுஜன ஊடகங்கள் தொடத் தயங்கும் விவகாரத்தை வலுவாக முன்வைத்த படம் ‘மான்சூன் வெட்டிங்'. விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் வரவேற்பையும் ஒருசேரப் பெற்ற படம். வெனிஸ் திரை விழாவில் தங்கச் சிங்கம் விருதைப் பெற்றது. மீரா நாயருக்குச் சர்வதேச அரங்கில் நிரந்தரப் பெயரையும் பெற்றுத் தந்தது.

வரலாற்று புராணப் படமான ‘காமசூத்ரா: ஒரு காதலின் கதை', ஜும்பா லஹிரியின் பிரபல நாவலான ‘தி நேம்சேக்', உலகின் முதல் பெண் சாகச விமானியான அமெலியா இயர்ஹார்ட்டைப் பற்றிய ‘அமெலியா' உள்ளிட்ட படங்கள் மறக்க முடியாதவை.

தெரியுமா?

ஒரு நாடக நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் மீரா. அவருடைய பின்பாதிப் பெயர் நாயர்தான் என்றாலும், கேரளத்துக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் மீரா. நய்யார் என்பதுதான் நாயர் என்று திரிந்துவிட்டது.

சமூக அக்கறை சார்ந்த தன்னார்வச் செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார். ஆண்டுதோறும் 5,000 தெருவோரச் சிறுவர்களின் நலம் காக்கும் ‘சலாம் பாலக்’ அறக்கட்டளை, கிழக்கு ஆப்பிரிக்க இளம் திரைக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் ‘மாய்ஷா ஃபிலிம் லேப், ஆகியவற்றை மீரா நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x