Last Updated : 10 Apr, 2014 04:23 PM

 

Published : 10 Apr 2014 04:23 PM
Last Updated : 10 Apr 2014 04:23 PM

அதிசய உலகம்: சிலைகளுடன் ஒரு மர்மத் தீவு

உலகில் மர்மம் நிறைந்த பகுதிகள் நிறைய உள்ளன. அதில் ஈஸ்டர் தீவும் ஒன்று. இங்கு அப்படியென்ன மர்மம் உள்ளது என்றுதானே நினைக்கிறீர்கள். ‘மோவாய்’ என்று அழைக்கப்படும் கற்சிலைகள் இங்கு நிறைய உள்ளன.

மோவாய் என்பது ‘பறவை மனிதன்’ என்ற உருவத்தைச் சொல்லும் வார்த்தை. பண்டைய கால மூதாதையர்களின் முகங்கள் இவை. இது தொன்மை வாய்ந்த ஒரு மனித இனத்தின் வழிபாட்டுச் சிலை. மோவாய் பற்றி இப்படி நிறையச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பறவை மனிதன் சிலை வழிபாடு தென்கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிலி நாட்டுக்கு அருகே ஈஸ்டர் தீவில் மிகப் பிரபலமாம். இதற்காக ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பிரம்மாண்டமான சிலைகளை அத்தீவு முழுவதும் நிறுவி மக்கள் வழிபட்டதாகக் கூறுகிறார்கள். சிலைகளை வைப்பதற்காகவே அத்தீவில் இருந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மரம் அழிக்கப்பட்டதால் ஒரு கட்டத்தில் அத்தீவில் மழை பொய்த்து விவசாயத்துக்கு வழி இல்லாமல் போனது. இதனால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பசியைப் போக்க மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று நர மாமிசம் உண்டு மடிந்தனர். எஞ்சியவர்கள் அம்மை நோயால் இறந்தனர் என இத்தீவைப் பற்றிப் பல கதைகள் உலா வருகின்றன.

உச்சக்கட்டமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இருந்தே இத்தீவு துண்டிக்கப்பட்டு மர்ம தேசமாக மாறியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படி மர்மங்கள் நிறைந்த இத்தீவு 1888-ம் ஆண்டுக்குப் பின்புதான் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. இத்தீவு மக்களின் வாழ்க்கை முறையை முழுவதும் அறிய இப்போதும்கூட தொல்லியல் துறையினர் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸ்டர் தீவில் தற்போது வரை 887 மோவாய் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் 10 மீட்டர் உயரத்திலும் 80 முதல் 250 டன் எடையிலும் உள்ளது. இந்தச் சிலைகளை எப்படி வடித்தார்கள், கற்களை எப்படித் தூக்கி நிறுத்தினார்கள் என்பதற்கெல்லம் துல்லியமான பதில்கள் இல்லை.

மனிதர்களே இல்லாமல் சிலைகளுடன் உள்ள ஈஸ்டர் தீவு மர்ம தேசமாகவே இன்றும் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x