Published : 12 Feb 2019 10:37 AM
Last Updated : 12 Feb 2019 10:37 AM

எழுத்துகளில் வாழும் அண்ணா

திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 அன்று காலமானார். அவரது 50-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் அண்ணா எழுதிய முக்கியமான நூல்கள், அவரைப் பற்றிய நூல்களின் தொகுப்பு அவரது மேன்மையையும் அவரது அரிய பங்களிப்புகளையும் புரிந்துகொள்வதற்குத் தூண்டுகோலாக அமையும்.

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (ஏழு தொகுதிகள்): திராவிட இயக்கத்தையும் திராவிட அரசியலையும் நாடி வந்தவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டவும் இயக்கக் கொள்கைகளை உள்வாங்க வைக்கவும் கடித இலக்கியத்தை அண்ணா பெருமளவில் பயன்படுத்தினார். ‘திராவிட நாடு’, ‘காஞ்சி’ உள்ளிட்ட இதழ்களில் அவர் எழுதிய கடிதங்கள் பல்வேறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆரிய மாயை – ஆரியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுத் திராவிட இனம் எழுச்சி அடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்ணா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தச் சிறு நூல். அன்றைய சென்னை மாகாண அரசால் தடை செய்யப்பட்ட இந்த நூலுக்காக, அண்ணா சிறையும் சென்றார்.

இந்தி எதிர்ப்பு ஏன்? - இந்தியாவின் ஒற்றைத் தேசிய மொழியாக இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான போராட்டத்தைத் திராவிட இயக்கம் ஏன் கையிலெடுத்தது என்பதை விளக்கும் நூல்.

நீதி தேவன் மயக்கம் – அண்ணா எழுதிய நாடகங்களில் முக்கியமானது. கம்பரையும் ராவணனையும் கதாபாத்திரங்களாக்கி, ராவணனுக்கு நீதி கிடைப்பதுபோல் எழுதப்பட்ட நாடகம். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் முன்பு இடம்பெற்றிருந்தது.

சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) – மராத்திய மன்னன் சிவாஜி ஆட்சிப் பொறுப்பேற்ற சூழ்நிலைகளை முன்வைத்து பிராமண ஆதிக்கம் எப்படிக் கோலோச்சியது என்பதை விளக்கும் நாடகம். இந்த நாடகத்தில் நடித்ததாலேயே நடிகர் திலகம், ‘சிவாஜி' கணேசன் எனப் பெரியாரால் அழைக்கப்பட்டார்.

பணத்தோட்டம்- பொருளாதாரம் பற்றிய அண்ணாவின் கருத்துகளைத் தாங்கிய நூல். தமிழ்நாட்டின் பன்னாட்டு வணிக வரலாற்றையும் பிற்காலத்தில் அது எப்படி வடநாட்டின் சந்தையாகச் சுருக்கப்பட்டது என்பதையும் விவரிக்கும் நூல். சில ஆண்டுகளுக்கு முன் இதன் புதிய பதிப்பை ஆழி பதிப்பகம் வெளியிட்டது.

ரங்கோன் ராதா – ‘குடியரசு’ ‘விடுதலை’, ‘திராவிட நாடு’, ‘காஞ்சி; ஆகிய இதழ்களில் அண்ணா பல நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றான இந்த நாவல், சமூகத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப்படுபவர்களின் உண்மையான இயல்பைத் தோலுரிக்கும் வகையில் எழுதப்பட்டது. 1956-ல் இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்துத் திரைப்படமாகவும் வெளியானது.

அண்ணாவின் சிறுகதைகள் – பல்வேறு இதழ்களில் அண்ணா எழுதிய சிறுகதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தவிர ‘பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்', ‘எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்', ‘முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்' ஆகியவற்றைத் தனி நூல் தொகுதிகளாக பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அண்ணாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உரைகளை ‘Carry on but remember’ என்ற தலைப்பில் ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அண்ணாவைப் பற்றிய நூல்கள்

> Anna: life and Times of C.N.Annadurai – ஆங்கிலத்தில் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூல். எழுதியவர் இரா.கண்ணன்; பென்குவின் குழுமம் வெளியிட்ட இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘அண்ணா’ என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்- சாருகேசி

> நான் கண்ட அண்ணா - எம்.எஸ்.வேங்கடாசலம்

> அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணானந்தம்

> பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு –வளர்ப்பு மகன் டாக்டர் அண்ணா பரிமளம் எழுதிய நூல்

> சட்டசபையில் அண்ணா – நாவலர் நெடுஞ்செழியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x