Published : 18 Feb 2019 11:02 AM
Last Updated : 18 Feb 2019 11:02 AM

அலசல்: வெளிப்படைத் தன்மை அவசியம்

கடந்த வாரம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டவர் தொழிலதிபர் அனில் அம்பானி. இவரது குழும நிறுவனங்களின் பங்குகள் 5 நாளில் ரூ. 13 ஆயிரம் கோடி வரை சரிந்து 72 லட்சம்பங்குதாரர்களை கதிகலங்கச் செய்துவிட்டது.

இதில் கோடீஸ்வரர்களாயிருந்தவர்களை லட்சாதிபதிகளாகவும், லட்சாதிபதிகளை தெருவுக்கும் இழுத்துக்கொண்டு வந்துவிட்டன இக்குழும நிறுவனப் பங்குகள்.

பங்குச்சந்தையில் தனது பங்குகள் கடுமையாக சரிந்ததற்கு லார்சன் அண்ட் டூப்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமும் எடெல்வைஸ் நிறுவனமும்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார் அனில். இவ்விரு நிறுவனங்களிடமும் தான் அடமானம் வைத்திருந்த பங்குகளை இவை திடீரென விற்பனை செய்ததால் பங்கு விலை சரிந்ததாக இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பங்குகள் சரிந்ததற்கு தான் காரணமல்ல என்று கூறும் அனில் அம்பானியின் வாதத்தை, எந்த அளவுக்கு ஏற்பது என்பதை அலசி ஆராய்ந்தோமானால் உண்மை புரியும். பொதுவாகப் பங்குகளை அடமானம் வைப்பதில் தவறோ சட்ட விரோதமோ கிடையாது. தனிப்பட்ட தேவைக்கோ அல்லது நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைக்கோ பங்குகளை அடகு வைப்பது வழக்கமான ஒன்றே. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்தம் 2,735 நிறுவனப் பங்குகளில் 637 நிறுவனங்களின் நிறுவனங்கள் தங்களின் பங்குகளை பிற நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளன.

2009-ம் ஆண்டிலேயே எந்த அளவுக்கு பங்குகளை நிறுவனர்கள் அடகு வைத்துள்ளனர் என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி பிறப்பித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு காலாண்டு நிதி நிலை அறிக்கையை செபி-யிடம் தாக்கல் செய்யும்போது எவ்வளவு பங்குகள் நிறுவனர் வசம் உள்ளன என்பதையும், அதில் எத்தனை சதவீத அளவுக்கு அடகு வைக்கப்பட்டு எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சில தேர்ந்த முதலீட்டாளர்கள் மட்டுமே இதை உணர்ந்து அதற்கேற்ப தங்களது முதலீடுகளை மேற்கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு இந்த விவரம் தெரிவதில்லை.

இப்போதுள்ள நிலவரத்தின்படி 57 நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகள் முழுவதையும் அடகு வைத்துள்ளனர். 252 நிறுவனங்களின் நிறுவனர்கள் 50 சதவீத அளவுக்கு அடகு வைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக 43 சதவீத அளவுக்கு இவர்கள் அடகு வைத்துள்ளதாக செபி அறிக்கை தெரிவிக்கிறது. இதேபோல அதிக அளவில் பங்குகளை அடகு வைத்துள்ள நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாகச் செயல்படவில்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இது முதலீட்டாளர்களின் சேமிப்புக்கு கிடைத்த பெரும் பின்னடைவுதான்.

காலாண்டுக்கு ஒரு முறை அடகு வைத்துள்ள பங்குகளின் விவரங்களை வெளியிடுவதற்குப் பதிலாக மாதந்தோறும் இந்த விவரத்தை வெளியிட செபி வலியுறுத்தலாம். அதேபோல அடகு வைக்கப்பட்ட பங்குகளுக்கு உரிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறுவது போன்ற விவரங்களை அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்தில் வெளியிடலாம்.

 அடகு வைத்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பங்குகளை விற்பனை செய்ததாக எல் அண்ட் டி ஃபைனான்ஸ் மற்றும் எடெல்வைஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒப்புக் கொண்டபடி நிலுவைத் தொகை செலுத்த அறிவுறுத்தக் கோரியும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதை செயல்படுத்தவில்லை என்று கூறியுள்ளன.

கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரான அனில் அம்பானியால், ஒரு சில மணி நேரம் கூட சாதாரண அறை வெப்ப நிலையை தாங்க முடியவில்லை. அப்படிப்பட்டவருக்கு முதலீட்டாளர்களின் வியர்வை குறித்து தெரியவா போகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x