Published : 23 Feb 2019 11:48 AM
Last Updated : 23 Feb 2019 11:48 AM

நெகிழி பூதம் 04: ‘குப்பைக் கால’த்திலிருந்து மீள்வோம்

கட்டிட வேலை முதல் கார்பரேட் கம்பெனியில் வேலை பார்ப்போர்வரை தேநீர் இடைவேளையில் டீ, காபி இல்லை என்றால் தலைவலி நிச்சயம் என்று நம்புகிறார்கள். தேநீர், சாம்பார், சட்னி, குழம்பு போன்ற திரவப் பொருட்களை கடையில் இருந்து நாம் இருக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்வதை எளிதாக்கிய பெருமை ஞெகிழியையே சேரும்.

உணவகங்களில் சாம்பார், கூட்டு போன்ற அனைத்தையும் ஞெகிழி உறைகளில் முன்கூட்டியே பொட்டலம் கட்டி வைத்துவிடுவதால், கடைக்காரர்களுக்கு நேரம் மிச்சமானதாகக் கருதப்பட்டது. அத்துடன் மொத்தமாகத் தேநீர் வாங்கினால், தேநீர் ஊற்றப்பட்ட ஞெகிழி உறையுடன் கூடுதலாக ஞெகிழி பையோ, ஞெகிழி பூசப்பட்ட காகிதக் குவளையோ இலவசமாகக் கிடைத்தது. ஒரு நபருக்கு மதியச் சாப்பாடு வாங்கினால் கூட்டு, பொரியல் என ஒவ்வொன்றும் தனித்தனியாகக் கட்டப்பட்ட ஞெகிழி உறைகள், ஒரு அலுமினிய உறை, ஒரு ஞெகிழிப் பை இலவசமாகக் கிடைத்தது. இப்படியே ஞெகிழி பூதத்தை கடையில் இருந்து நம் உடலுக்கும் வீட்டுக்கும் பல ஆண்டுகளாக கொடுத்துக்கொண்டே இருந்துவிட்டோம்.

மீள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம்

ஞெகிழியுடனான வாழ்க்கை முறை எல்லா வேலைகளையும் எளிதாக்கியதாகத் தோன்றியது. ஆனால், அது மெல்லக் கொல்லும் நஞ்சு என்பதை இப்போது உணர்ந்துவிட்டோம்! அத்தனை ஞெகிழி உறைகளையும் ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிந்து, நாம் வாழும் காலத்தை 'ஞெகிழி குப்பைக் கால'மாக மாற்றிய அவப்பெயரையும் சம்பாதித்துவிட்டோம். தற்போது ஞெகிழிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, நாம் மீள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம்.

மீண்டும் தூக்குச்சட்டிகளை தூக்க ஆரம்பித்துவிடுவோம். இனிமேல் அலுவலகங்கள், கடை, குழுக்கள் சார்பில் தேநீர் வாங்க யாரும் கையை வீசிக்கொண்டு செல்ல மாட்டார்கள். தேநீர், காபி வாங்க சூட்டைத் தாங்கும் ஃபிளாஸ்க் அல்லது எளிமையான ஒரு தூக்குசட்டியை பயன்படுத்தத் தொடங்குவோம். இதனால் தினசரி குவியும் ஞெகிழி குப்பை குறையும். அதேநேரம் உங்கள் தேநீர் சூடாக மட்டுமில்லாமல் சுகாதாரமாகவும் சூழலுக்கு நண்பனாகவும் ஒரு சேர இருக்கும்.

நினைவை மீட்டெடுப்போம்

மதிய உணவு வாங்கப் போகிறோமா, வீட்டில் உள்ள பாத்திரங்களை தயார்செய்வோம். மூன்று அடுக்கு டிபன் கேரியர் இருந்தால், காய் வகைகளை வாங்கலாம். ஒரு பெரிய டப்பாவில் சாப்பாடு, சிறிய டப்பாக்களில் சாம்பார், குழம்பு, ரசம், மோர் போன்றவற்றை வாங்கலாம். இந்த பாத்திரங்களை ஒருமுறை தயார்செய்து கூடையில் வைத்துவிட்டால் போதும். பசி எடுத்துவிட்டது, கடைக்கு போக வேண்டும் என்ற அவசரத்தில் இந்த கூடை உங்களுக்கு பெரும் துணையாக இருக்கும்.

ஞெகிழி என்பது ஒரு பொருள் சார்ந்த பிரச்சினை அல்ல. அது வாழ்க்கை முறை சார்ந்தது. நம் வாழ்க்கை முறையில் மக்காத, மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களுக்கு இடமில்லாமல் ஆக்க வேண்டும். அதற்கு நாம் சிறிது மெனக்கெட வேண்டும். முப்பது ஆண்டுகளாக நாம் மறந்த பழக்கங்களை நினைவிலிருந்து மீட்டெடுப்போம். பதில் நம்மிடம்தான் உள்ளது.

அலுமினிய உறை நல்லதா?

ஞெகிழித் தடைக்கு பின்னர் உணவகங்களில் அலுமினிய நிற உறைகள் அதிகம் புழங்குகின்றன. இது மக்குமா, நல்லதா என்ற கேள்வி மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை அலுமினியச் சாயம் சேர்த்த ஞெகிழித் தன்மை கொண்ட உறைகளே. மறுசுழற்சி செய்யும் கடைகளில் இவற்றை விற்க முடியாது. இதுவும் தேவையற்ற குப்பையே. இது சார்ந்து மாசு கட்டுப்பாடு வாரியம் விரைவில் முடிவு எடுக்கும் என்று நம்புவோம்.

- கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x