Last Updated : 16 Feb, 2019 12:15 PM

 

Published : 16 Feb 2019 12:15 PM
Last Updated : 16 Feb 2019 12:15 PM

காயமே இது மெய்யடா 21: உப்பும் காரமும் பல்லுக்கு உறுதி

பல், சிறுநீரகத்தால் பராமரிக்கப்படும் எலும்பின் புறப்பகுதி என்று பார்த்தோம். மண்ணீரலின் புற உறுப்பாகிய ஈறுகளால் பற்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

பல்லுக்கு ஒளி தரும் மேல்ப்பூச்சு எனாமல் எனப்படும். அதற்கு அடுத்த உள் படிவமான தந்திரியே (dintin) பல்லுக்குக் கடிப்பதற்குரிய கெட்டித் தன்மையைக் கொடுக்கிறது. அதற்குள் பற்கூழ் (pulp) எனும் சற்றே மிருதுவான பகுதி அமைந்துள்ளது. இறுதியாக நடுவில் துளியளவு ரத்தம் வந்து செல்கிறது.

கீழ்ப்பகுதியான வேர், ஈறு ஊடக முகப் பொலிவுக்கு ஆதாரமாக உள்ள தாடையில் நிலை கொண்டுள்ளது. தாடையிலும் பல்லின் வேர் நேராகப் பூட்டி வைக்கப்படவில்லை. மென்நார்த் திசு (legument) வின் மீது கிட்டத்தட்ட மிதக்கும் நிலையில் உள்ளது. இந்த மென் திசு பல் தரும் அத்தனை

அதிர்ச்சிகளையும் தாங்கிக்கொள்ளும் அதிர்வு தாங்கியாக (shock observer) இருக்கிறது. இல்லையென்றால் கரும்பு, மாமிச எலும்பு, பட்டாணி போன்றவற்றைக் கடிக்கும்போது ஒரு கடியிலேயே தாடை வலிகண்டு, மேற்கொண்டு கடிக்க இயலாமல் போய்விடும். வளரிளம் பருவத்தில் கடிக்கவும் அசைபோடவுமான பழக்கம் வேண்டும். அந்த வயதில் இருக்கும் உடலின் வளர்சிதை (metabolisim) மாற்றத்தைப் பொறுத்தே முகத்தின் அகலமும் தாடையின் உறுதியும் தீர்மானிக்கப்படுகின்றன.

பல்லைத் துலக்க இனிப்பு எதற்கு?

நம்முடைய இன்றைய உணவு முறைக்கும் பெருகிவரும் பல் தொடர்பான நோய்களுக்கும் நேரடியான தொடர்பு உள்ளது. அத்துடன் மாவுத்தின்மை மிகுந்த உணவு, வயிற்றில் அமிலம் தேங்கக் காரணமாகிறது.

வயிற்றில் தேங்கும் அமிலத்தால் வாயில் ஊறும் உமிழ் நீரில் புளிப்புத்தன்மை அதிகரித்து விடுகிறது. உமிழ் நீரின் அமிலத் தன்மை பல்லின் மேற்பூச்சான எனாமலை அரித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஈறு பல்லின் மீது மஞ்சள் கோட்டிங் கொடுத்து ஒரு தற்காப்பைச் செய்கிறது. வயிற்றின் அமிலம் தேங்குவதைத் தடுப்பதற்கான வழியை மேற்கொள்ளாமல் பற்களைத் தேய்த்தெடுத்தால் அவை மேலும் பலவீனமாகவே செய்யும்.

பற்கள் பராமரிப்பு என்றவுடன், ஒருநாளைக்கு எத்தனை முறை பற்களைத் துலக்குவது? எந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துவது என்று எண்ண வேண்டாம்.

உண்மையில் பற்பசைகள் பற்களைக் காப்பதைக் காட்டிலும் சிதைக்கும் வேலையையே அதிகமும் செய்கின்றன. அவற்றை இறுதியாகப் பார்ப்போம். “உங்க பேஸ்ட்டில் உப்பு இருக்கா” என்று நம்மைப் பீதிக்கு உள்ளாக்குபவர்கள் “உங்க பல்லைத் துலக்க இனிப்பு எதற்கு” என்று எப்போதாவது கேட்டதுண்டா?

இயற்கைக்குத் திரும்புவோம்

காரச் சுவையும் உப்புச் சுவையும்தாம் பல்லுக்கு வலிமை சேர்க்கும். இயற்கையான தாதுகளும் பல்லுக்கு வலிமை சேர்ப்பவையே. தாதுகள் நிறைந்த வண்டல் மண், சாம்பல் போன்றவற்றைக் கொண்டு பல் துலக்குவதே பண்டையப் பழக்கம். பட்டை, கிராம்பு போன்ற காரச்சத்து மிகுந்த பொருட்களைக் கொண்டும், கருக்கிய மர வேர்களைக் கொண்டும் பாறையுப்புக் கலந்தும் செய்யப்பட்ட பற்பொடிகள் பத்துக்கும் மேலே இன்றும் கைக்கெட்டும் தொலைவில் கிடைக்கின்றன.

மூலிகை கொண்டு தயாரிக்கப் படும் இயற்கையான காரமும் உப்பும் உயிர்த் தன்மை மிகுந்தவை. பற்பொடியின் உப்பும் காரமும் நமது சுவாசத்தை எளிதாக்குகின்றன. செரி மான மண்டலத்தைத் தூண்டுகின்றன. அனைத்துக்கும் மேலாக நம்முடைய நரம்பு மண்டலம் முழுமைக்கும் புத்துணர்வைத் தருகின்றன.

ஆரோக்கியத்தின் அடித்தளம்

சுட்டு விரலின் நுனி, மூக்கில் தொடங்கி, பெருங்குடல் கடந்து குதவாய்வரை நுண்ணுணர்வைத் தூண்டவல்லது. அவரவர் சுட்டு விரலின் முனையில் பற்பொடியைத் தொட்டுத் தேய்க்கும் பொழுதுதான் புத்தாற்றலைப் பெற முடியும்.

ஆட்காட்டி விரலை வளைத்து ஈறை மிதமாகத் தொட்டு அழுத்தி விட வேண்டும். அதேபோல் கீழ்ப்பற்கள் அனைத்தையும் மேலிருந்து கீழ்நோக்கியும், மேல் பற்களைக் கீழிருந்து மேல்நோக்கியும் விரலால் ஓரிருமுறை அழுத்திவிட்ட பின்னரே விரலின் நுனியால் பற்பொடியைத் தொட்டுத் தேய்க்க வேண்டும். ஒரு பைக்

மெக்கானிக் சைலென்சர் புகை அடையைக் கம்பி பிரஷ் கொண்டு தேய்ப்பதைப் போல் பற்களை ஆவேசமாகத் தேய்க்கக் கூடாது. ஏனென்றால், தோற்றப் பொலிவுக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் பற்கள் அவசியம்.

- (தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x