Last Updated : 26 Sep, 2014 11:04 AM

 

Published : 26 Sep 2014 11:04 AM
Last Updated : 26 Sep 2014 11:04 AM

ரசிகர் மன்றமா? ஆளை விடுங்க பாஸ்!: தினேஷ் பேட்டி

ஐந்து படங்களைத் தாண்டிவிட்டாலும் ஊடகத்துக்கு இன்னும் ‘அட்டகத்தி’ தினேஷ்தான். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் அழுத்தமாகப் பொருந்தி, யதார்த்த மான நடிப்பைத் தந்தவர் தினேஷ்.

‘குக்கூ’வில் பார்வையற்ற இளைஞராகக் கலங்கவைத்த இவர், தற்போது நடித்து முடித்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’. நண்பர்களுடன் ஜாலி அரட்டையில் ஈடுபட்டிருந்தவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்…

இப்போ என்னென்ன படம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

விசாரணை படம் பண்றேன். வெற்றி மாறன் இயக்குறார். தனுஷ் தயாரிக்கிறார். அப்புறம் வெற்றி மாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் ‘அண்ணனுக்கு ஜே’ படம். ‘உள்குத்து’ன்னு இன்னொரு படம். இந்தப் படத்தில் ‘திருடன் போலீஸ்’ படக் குழு அப்படியே மீண்டும் இணைகிறது. இந்தப் படங்களை முடிச்சப்புறம் மற்ற படங்கள்.

தனுஷின் நட்பு வட்டம் எப்படிச் சாத்தியமாச்சு?

சக திறமையாளர்களைச் சட்டுன்னு அங்கீகரிக்கிற மனுஷன் அவர். சிவகார்த்திகேயனை வைச்சு எதிர்நீச்சல் பண்ணாரு. இப்போ விஜய் சேதுபதி - நயன்தாராவை வைச்சு பண்றாரு. என்னை வைச்சு விசாரணை பண்றார். எல்லாரையும் புரோமோட் பண்ற மனசு ரொம்ப சவாலான குணம், அது தனுஷ்கிட்ட இருக்கு.

திருடன் போலீஸ் என்ன கதை?

இது ரொம்ப எமோஷனல் கதை. இந்தப் படம் அப்பாக்களுக்கான படமாக இருக்கும். இருக்குறப்ப தொல்லையா நினைக்கிற உறவுகளை இறந்த பிறகு தெய்வம்னு பேசுறோம். அதான் படமே. சிரிச்சு சிரிச்சு வயிறு வெடிக்கப் பெரிய ஏரியா இருக்கு. அதனால் இதைத் துள்ளல் படம்னு சொல்லனும்.

ஹீரோவா நடித்துக்கொண்டே நட்புக்காகவும் பல படங்கள்ல தலை காட்டுறீங்களே, உங்கள் இமேஜைப் பாதிக்காதா?

கண்டிப்பா பாதிக்காது. எதிர்நீச்சல் படத்தில் ‘அட்டகத்தி’ படத்தோட ஃபாலோ மாதிரிக் கடைசியில் ஒரு சீன் வைச்சாங்க. நான் எதிர்பார்க்காத அளவுக்கு அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சது. இதுக்கு இயக்குநரின் புத்திசாலித்தனம்தான் காரணம். விஜய் சேதுபதிக்காகப் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிச்சேன்.

இப்போ என்னோட ‘திருடன் போலீஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாட்டு பண்ணியிருக்கிறார். ஜீவா, ஆர்யா மாறிமாறி மத்தவங்க படங்களில் நடிச்சாங்க. இப்போ பீல்டில் பிஸ்னஸ்தான் முக்கியம். இது மார்க்கெட்டிங் உத்தின்னு நீங்க எடுத்துக்கிட்டாலும் அதுவும் சரிதான்.

ரெண்டு படம் ஹிட் கொடுத்தாச்சு... அடுத்து ஆக்‌ஷன் அவதார்தானே வழக்கமா இருக்கும்?

குக்கூ ரொம்ப கனமான படம். அதனால ரெண்டு படம் தள்ளி ஆக்‌ஷனைக் கையில எடுக்கிறதுன்னு முடிவு. நினைச்ச மாதிரியே ‘உள்குத்து’ வந்து சிக்கிடுச்சு. அது அதிரடி ஆக்‌ஷன் படம்தான். திருடன் போலீஸ் படத்துலயும் ஆக்‌ஷன் இருக்கு. ஆனா அது கதையோட சேர்ந்த ஆக்‌ஷன். எனக்குத் தகுந்த மாதிரி ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்‌ஷன் வச்சுருக்காரு.

அறிமுகப் படம் ஹிட்டடிச்சா உடனே ரசிகர் மன்றங்கள் வந்துடும். உங்களுக்கு வந்தாச்சா?

அய்யோ, மாட்டிவிடாதீங்க. ரசிகர் மன்றங்களை என்னால மேனேஜ் பண்ண முடியாது. கடலூரில் சில பேர் பேனர் வைச்சு, மாலை போட்டு, அதை போட்டோ எடுத்து அனுப்பினாங்க. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. என்னைப் பொறுத்தவரை என் படங்களை ரசிகர்கள் வந்து பார்த்தாலே போதும்.

அவங்களோட அன்பு போதும். ஒரு கூட்டத்தைத் தோளில் சுமக்குறது என்னால முடியாது. ஷூட்டிங் முடிஞ்சா எப்போ வீட்டுக்குப் போகலாம்னு நினைக்கிற ஆளு நான்.

உங்களுக்குக் கிடைச்ச பொக்கிஷப் பாராட்டு?

எதேச்சையாக ஒருமுறை கவுண்டமணியைப் பார்த்தபோ ‘ஏய், அட்ட, என்னப்பா?’ன்னு கேட்டாரு. எனக்கு ரொம்ப வியப்பா போச்சு. குக்கூ படத்துல கண்ணு வலிக்காம எப்படி நடிச்சேன்னு கேட்டாரு. அவரு அப்டேட்டா இருக்குறதைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்.

யார் கூடச் சேர்ந்து நடிக்க ஆசை?

ரஜினியோட நடிக்கணும்னு ஆசை இருக்கு. அவருகூட எந்த ரோல் கிடைச்சாலும் நடிக்க நான் ரெடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x