Published : 07 Feb 2019 06:40 PM
Last Updated : 07 Feb 2019 06:40 PM

என்னோட நேர்மை ரசிகர்களுக்கு…! - நடிகை அஞ்சலி பேட்டி

‘பேரன்பு' படத்தில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலி பல தரப்புப் பாராட்டையும் பெற்று வருகிறார். சமீப காலமாக உடல்எடையைக் குறைத்து, கோலிவுட் எதிர்பார்க்கும் கச்சிதமான தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். ‘லிசா', ‘சிந்துபாத்', ‘நாடோடிகள் 2', ‘கீதாஞ்சலி 2' எனப் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பவரிடம் பேசினோம்…

கதாநாயகியாக 12 ஆண்டுகள் பயணம் எப்படி இருக்கிறது?

தெலுங்கில் நடிக்கவுள்ள ‘கீதாஞ்சலி 2' என்னோட 50-வது படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் சந்தித்த ஏற்றதாழ்வுகள் மூலமா நிறையக் கத்துகிட்டேன். சமீப காலமா சென்னையில அதிக நாட்கள் தங்குவதில்லை. ஏன்னா..ஹைதராபாத்தில் அம்மாவோட வசிக்கிறேன். அக்காவையும்அங்கேதான் திருமணம் செய்து கொடுத்திருக்கோம்.

‘பேரன்பு' விஜி கதாபாத்திரம் எப்படி உருவானது?

ராம் சார் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர். அவர் எப்போது நடிக்கக் கேட்டாலும் மறு வார்த்தை பேசாமல் ஒப்புக்கொள்வேன். அதுஅவர் மீது வைத்திருக்கும் மரியாதை. இந்த முறையும் அவர் கதைசொல்லவில்லை. படப்பிடிப்புக்குப் போனபோதுதான் என்னோட கதாபாத்திரத்தைப் பற்றிச் சொன்னார். அதைக் கேட்டதும் இது நமக்குக் கிடைச்ச இன்னொரு அற்புதமான வாய்ப்பு என்று நினைத்தேன். ‘பேரன்பு' விஜி கேரக்டர் போல இதற்கு முன் நான் நடித்ததில்லை. இயக்குநர்கள், சக நடிகர்கள் படம் பார்த்துட்டு பாராட்டிகிட்டேஇருக்காங்க. என்னோட போன் பாராட்டு மெசேஜ்களால நிரம்பிவழியுது.

மம்மூட்டியுடன் நடித்த அனுபவம்..

அவரைப் பற்றி நிறையப் பேசலாம். அவரோட எளிமை, அமைதி ஆச்சரியப்படுத்திகிட்டே இருக்கும். அவருடைய கண்கள், புருவம், கன்னம் என்று ஒட்டுமொத்த முகமும் நடிக்கும். டப்பிங் நடந்தப்போ அவர் அளவுக்கு நமக்கு நடிக்கத் தெரியலையேன்னு நினைச்சேன்.படப்பிடிப்பின்போது இயக்குநர் என்ன சொன்னாலும் செய்வார். நான்ஏன் இதைப் பண்ணனும் என்று கேட்கவே மாட்டார். அப்படிப்பட்டவர் என்னோட நடிப்பைப் பார்த்துட்டு மனம் விட்டுப் பாராட்டினார். அவரோட பாராட்டு எனக்குப் பெரிய கௌரவம்.

anjali-2jpgright

தமிழ், தெலுங்கைத் தாண்டி நடிக்கவில்லையே. ஏன்?

இரண்டிலுமே முக்கியமான கேரக்டர்கள் கிடைக்கிறப்போ எதுக்கு வேற? இந்த இரண்டு மொழிகள்லயும் தொடர்ச்சியாக நடிச்சுகிட்டேஇருக்கணும். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காது. இப்போ தெலுங்கிலயும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எடுக்கத் தொடங்கியிருக்காங்க.

முன்பைப் போல உங்களைப் பற்றி கிசுகிசு செய்திகள் ஏதும் வருவதில்லையே!

அப்படின்னா ரொம்ப ஃபெர்பெக்ட்டாக இருக்கேன்னு அர்த்தம். முன்னெல்லாம் காசிப் படிச்சுட்டு ரொம்ப பீல் பண்ணுவேன். இப்போல்லாம் அலட்டிக்கிறதே இல்ல. 12 வருடமா ஹீரோயினா இருக்கிறதே பெரிய பெரிய வரம். அதைக் கொடுத்திருக்காங்க. அதுக்கு ஆடியன்ஸுக்கு நேர்மையா இருந்தா போதும்.

நடிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறதா?

சம்பளத்துக்காக மட்டுமே நான் நடிக்கிறதில்ல. சில நல்ல படங்களில் சம்பளத்தை விட்டுக் கொடுத்தும் நடிச்சிருக்கேன். அப்படி நடிச்ச கதாபாத்திரங்களைப் பற்றி இன்னும் பேசுறாங்க. சில படங்கள்ல நடிக்கப் பேசிய சம்பளத்தைவிடக் குறைவாக கொடுத்தும் இருக்கிறார்கள். சினிமா எப்போதுமே அப்படித்தான். அதுக்காக என்னோட கேரக்டரை நடிப்பு விஷயத்துல நான் கொல்றது இல்ல.

தேசிய விருது ஆசை உண்டா?

யாருக்குத் தான் இல்லாமல் இருக்கும். ‘அங்காடி தெரு' படத்துக்கு ஏதோஒரு பிரச்சினையால விருது கிடைக்கல. மாநில விருது, நந்தி விருதுஎல்லாம் வாங்கிவிட்டேன். இன்னும் தேசிய விருது மட்டும் பாக்கி. அதை வாங்குவேன்ற நம்பிக்கை இருக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x