Last Updated : 02 Jan, 2019 10:24 AM

 

Published : 02 Jan 2019 10:24 AM
Last Updated : 02 Jan 2019 10:24 AM

கதை: நட்புக்கு ஏங்கிய புலி!

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள ஓர் அடர்த்தியான காடு. அங்கே பெரிய மரங்களும் குகைகளும் பசுமையான புல்வெளிகளும் நிறைந்து இருந்தன.

பறவைகள் அங்கும் இங்கும் பறந்துகொண்டு கத்தும் சத்தம், விலங்குகள் குதித்தும் ஓடும் ஓசை, அருவியில் தண்ணீர் விழும் சத்தம் எல்லாம் சேர்ந்து ரம்மியமானா சூழலை உருவாக்கியிருந்தது.

மலை உச்சியில் ஒரு குகை. அந்தக் குகையில் புலி ஒன்று தனியே வசித்துவந்தது. அதுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அதைப் பார்த்தாலே காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சிதறி ஓடிவிடும். அதனால் யாரிடமும் சிரித்துப் பேசச்கூட முடியவில்லை. இதை நினைத்து புலி மிகவும் வருந்தியது. தனக்கு யாரும் நண்பராக வர மாட்டார்களா என்று ஏங்கியது.

அன்று வேட்டையாடச் செல்லும் வழியில், வேடன்  வைத்த பொறியில் மான் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்தது புலி.  உடனே அதைக் காப்பாற்ற முடிவெடுத்தது. புலி அருகில் வருவதைக் கண்ட மான், பயத்தில் நடுங்கியது. அருகில் சென்ற புலி, பொறியை ஒரே அடியில் அடித்து உடைத்தது. மான் வெளியே வந்தது. நிம்மதியாகச் சென்றுவிட்டது புலி.

மான் தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியது. புலியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தது. மறுநாள் புலியின் குகைக்குச் சென்றது.

மானைக் கண்டதும் புலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் சென்றால் பயப்படும் என்பதால், உள்ளே அமர்ந்தபடியே வந்த காரணத்தைக் கேட்டது.

“நேற்று உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் என்னைக் காப்பாற்றியதற்கு நன்றியும் சொல்ல வந்தேன்” என்றது மான்.

“நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும்” என்றது புலி.

மானுக்குத் திக்கென்றது.

“உனக்கு நம்பிக்கை வரும்போது என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும். நீ கிளம்பு” என்றது புலி.

“இல்லை, இப்போதே உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிடப் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது மான்.

புலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே மானுடன் கிளம்பியது. இதைப் பார்த்த சில விலங்குகள் ஆச்சரியமடைந்தன. சில விலங்குகள் மானை எச்சரித்தன. இன்னும் சில விலங்குகள் மானுக்கு மரியாதை அளித்தன.

நாட்கள் சென்றன. அன்று மான் காட்டில் தனியாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த சிங்கம், நல்ல வேட்டை என்று நினைத்தது. மெதுவாக மானை நோக்கிச் சென்றது. அப்போது மானைத் தேடிக்கொண்டு வந்த புலி, சிங்கத்தைப் பார்த்துவிட்டது. மானைக் காப்பாற்றும் அவசரத்தில் பாய்ந்துவந்தது.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மான், புலிதான் தன்னைத் தாக்க வருகிறது என்று எண்ணியது. சட்டென்று தாவிக் குதித்து ஓடியது.

மானைத் தப்பிக்க விட்ட புலி மீது சிங்கத்துக்குக் கோபம் வந்தது. உடனே சண்டைக்கு வந்தது. புலியும் சிங்கமும் சண்டையிடுவதைப் பார்த்து மற்ற விலங்குகள் ஆச்சரியமடைந்தன.

“நண்பனுக்காகப் புலி எப்படிச் சண்டை போடுகிறது!” என்றது குரங்கு.

“நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதை உணராத மான் பயந்து ஓடிவிட்டது” என்றது யானை.

நீண்ட நேரச் சண்டையில் சிங்கம் காயமடைந்து, களைப்புற்றது.

“என் நண்பன் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய நினைத்த உனக்கு, இனி இந்தக் காட்டில் இடமில்லை. இப்பொழுதே ஓடிவிடு” என்று கோபத்துடன் கூறியது புலி.

விட்டால் போதும் என்று சிங்கமும் ஓடிவிட்டது.

நடந்ததை அறியாத மான் தன் கூட்டத்தினரிடம் சென்று,  புலியைத் திட்டித் தீர்த்தது.

“நடந்தது என்ன என்பதை அங்கே இருந்து பார்த்திருந்தால் உனக்குத் தெரிந்திருக்கும். நட்புக்காகச் சிங்கத்திடம் சண்டையிட்டது. புலிக்கும் காயம் அதிகம். பாவம் குகையில் தனியாக வலியோடு போராடிக்கொண்டிருக்கும்” என்றது ஒரு புள்ளிமான்.

“ஐயோ… தவறாக நினைத்துவிட்டேனே. இதோ மூலிகையை எடுத்துக்கொண்டு, புலியைச் சந்திக்கிறேன்” என்று கிளம்பியது மான்.

புலி வலியில் துடித்துக் கொண்டிருந்தது. மருந்திட்ட மான், “என்னை மன்னித்துவிடு. வேகமாக நீ வருவதைப் பார்த்தவுடன், நீ என் நண்பன் என்பதை மறந்து ஓடிவிட்டேன். இனி இப்படி நடக்க மாட்டேன்” என்றது மான்.

“நான் உயிரினங்களைக் கொன்று திங்கும் இனத்தைச் சேர்ந்தவன்தான். அதற்காக நண்பனைக் கொல்வேனா? உன்னோடு நட்பு உருவான நாளில் இருந்து இன்றுவரை உன்னை மட்டுமில்லை, மான்கள் இனத்தையே நான் கொல்வதில்லை. நட்பு என்ற பெயரில் கேடு நினைக்க என்னால் முடியாது. என்னுடன் சண்டையிட்டு நீ சென்றாலும் கூட உன்னையோ, உன் இனத்தையோ நான் வேட்டையாட மாட்டேன். அதனால் என் மீது எப்போதும் உனக்குச் சந்தேகம் வேண்டாம்” என்றது புலி.

மானும் புலியும் மீண்டும் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x