Last Updated : 05 Sep, 2014 01:44 PM

 

Published : 05 Sep 2014 01:44 PM
Last Updated : 05 Sep 2014 01:44 PM

சென்னைக்குப் பெருமை சேர்க்கும் திரையரங்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாகத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் அற்புதமான ஒலி-ஒளித் தொழில்நுட்பத்துடன் திரையரங்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத் தரத்தில் சென்னையில் சினிமா பார்க்கும் அனுபவத்துக்கு ஒரு புதிய முகவரி ஒன்று உருவாகியுள்ளது. அருமையான வசதிகளுடன் கூடிய திரையரங்கம் மட்டும் இல்லாமல் திரையரங்கத்தைச் சுற்றியுள்ள இடமும் ஓர் ஓவியக்கூடம் போல உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பசுமையான சூழலில் இயங்கிவரும் அரசு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தான் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது. இதன் பெயர் தாகூர் பிலிம் சென்டர்.

“தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் முயற்சியில் இந்தியாவில் உருவான முதல் திரையரங்கம் இது. திரைப்பட வெளியீட்டுக்கான மாற்றுத் தளத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதி இது.” என்கிறார் என்எஃப்டிசியின் துணை மேலாளர் டி.ராமகிருஷ்ணன்.

டெல்லியிலும், மும்பையிலும் இதே போன்ற திரையரங்குகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. “சினிமா பார்க்கும் அனுபவத்தை சர்வதேசத் தரத்தில் அளிப்பதோடு மட்டுமின்றி, புதிய கலைத் திறன்களை ஊக்குவிப்பதற்கான ஒரு இடமாகவும் இது திகழும்” என்கிறார் அவர். க்யூப் பிக்சர் வசதியுடன் கூடிய 100 பேர் அமரக்கூடிய, த்ரீ டி தொழில்நுட்ப வசதியும் டால்பி அட்மோஸ் ஒலி அமைப்பும் கொண்ட அரங்கம் இது.

இந்தத் திரையரங்கத்துக்கான நிலத்தைக் குத்தகை அடிப்படையில் மாநில அரசு வழங்கியுள்ளது. என்எஃப்டிசியின் வடிவமைப்பில் உருவான இக்கட்டிடத் திட்டத்தை நிறைவேற்றியவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனக் கட்டிடப் பொறியியல் வல்லுநர்கள்.

“தொழில்நுட்பத் தரத்தில் மட்டும் அல்ல அனைத்து அம்சங்களிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியுள்ளோம். சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களுக்கான சறுக்குப்பாதைகளும், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்தியேகக் கழிவறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.” என்கிறார் ராமகிருஷ்ணன்.

அரண்மனையின் சுற்றுப்புறம் போல விரிந்து பரந்திருக்கும் திரையரங்கு வளாகத்தில் ஓவியங்களைக் காட்சிக்கு வைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறிய கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த ஒரு மேடை அமைப்பும் உள்ளது. திரையரங்கின் சுற்றுப்புறம் ஏதோ ஒரு வனச்சூழலுக்குள் இருப்பது போன்ற பசுமை உணர்வைத் தருகிறது. பரந்துவிரிந்த புல்வெளியும் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு விசாலமான பரப்பும் இதன் சிறப்பம்சங்கள். நாடக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தனிக்கூடமும் உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கு இந்தத் திரையரங்கம் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

தாகூர் மையத்தில் சமீபத்தில் நடந்த திரையிடலைக் காண வந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இத்திரையரங்கின் ஒலி ஒளி அமைப்பைப் பார்த்து வியந்துபோனார். “ உள்ளே நுழைந்த உடன், அமெரிக்காவில் உள்ள திரையரங்கத்தில் நுழையும் உணர்வு ஏற்பட்டது. இதே போன்ற தனி அரங்கம் ஒன்று நாடகக் கலைஞர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும்.” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x