Published : 07 Dec 2018 06:51 PM
Last Updated : 07 Dec 2018 06:51 PM

வெறும் சுவர் அல்ல 10: கட்டு வேலையின் தேவை என்ன?

கட்டிடம் இரண்டு வகையில் கட்டப்படுகிறது. ஒன்று LOAD BEARING STRUCTURE மற்றொன்று FRAMED STRUCTURE. தாய்ச் சுவர் அடிப்படையில் சுவர் மேல் சுவர் கட்டப்படுவது LOAD BEARING STRUCTURE. காலம், பீம் என்று அமைக்கப்படுவது FRAMED STRUCTURE. காலம், பீம் அமைக்கப்படாத கட்டிடத்தில் கட்டுவேலை எடை தாங்கும் வேலையைச் செய்கிறது.

இன்று பெரும்பாலான வேலைகள் காலம், பீம் அமைக்கப்பட்டே கட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட கட்டிடங்களில் கட்டு வேலை, இடத்தைப் பிரிக்க மட்டுமே (PARTITION) உதவுகிறது. இந்தச் சிந்தனையை மனத்தில் கொண்டு நாம் கட்டு வேலையைக் கவனிக்க வேண்டும்.

இரண்டு விதமான கனத்தில் கட்டுவேலை செய்யப்படுகிறது. 9 அங்குலம், 4.5 அங்குலம் ஆகிய அளவுகள் அவை. 9 அங்குலச் சுவர் பெரும்பாலும் வெளிப்புறச் சுவருக்கும் 4.5 அங்குலச் சுவர் உட்புறச் சுவர்களுக்கும் தேவையாயிருக்கிறது. பாதுகாப்பு, மழைப்பொழிவால் பாதிக்கப்படாமல் இருக்க வெளிப்புறச் சுவர் கூடுதல் கனத்துடன் அமைக்கப்பட வேண்டும்.

சிமெண்ட் கலவை

சிமெண்ட்டும் மணலும் கலந்த கலவை, செங்கற்களை இழுத்துப் பிடித்து வைக்கும் ஒரு பசை போல் செயல்படுகிறது. 9 அங்குலச் சுவருக்கு 1:6 என்ற விகிதத்திலும் 4.5 அங்குலச் சுவருக்கு 1:4 என்ற விகிதத்திலும் சிமெண்ட், மணல் கலக்கப்பட வேண்டும். கூடுதலாக மணல் கலக்கப்பட்டால் அந்தக் கலவையின் ஒட்டும் தன்மை வெகுவாகப் பாதிக்கப்படும். காலையில் வேலை ஆரம்பிக்கும்போது முழுமையாகக் கலவையைத் தயார்செய்து வைத்து நாள் முழுக்கப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். அவ்வப்போது தேவைக்கேற்ப கலவையைத் தயார் செய்வதே சரியான பயன்பாட்டு முறை.

எம் சாண்ட் பயன்படுத்தும்போது இந்தக் கலவையின் விகிதத்தில் மாறுபாடு தேவையா, அதாவது கூடுதலாக சிமெண்ட் பயன்படுத்த வேண்டுமா, என்ற கேள்விகள் பரவலாக மக்கள் மனத்தில் எழும். அப்படிப்பட்ட எந்தவித மாறுபாடும் தேவையில்லை.

suvar-2jpg

முறையான செயல்பாட்டு முறைகள்

ஒரு செங்கல் வரியில் அடுத்தடுத்த செங்கற்களுக்கு இடையே அரை அங்குலம் கனத்தில் சிமெண்ட் கலவை முறையான அழுத்தத்துடன் கொட்டப்பட வேண்டும். அதைப் போன்றே ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே அரை அங்குல கனத்தில் மட்டுமே கலவை இருக்க வேண்டும். கூடுதலாகக் கலவை கனம் இருப்பது தேவையற்றது.

கட்டுவேலையை எடுத்துக்கொண்டால் செங்கலின் விலை, சிமெண்ட் கலவையின் விலையைவிடக் குறைவு. செங்கற்கள் ஒன்றோடொன்று சிமெண்ட் கலவை என்னும் பசையால் பிணைக்கப்பட்டு கட்டுவேலை அமைக்கப்படுவதாக முன்பாகப் பார்த்தோம். இங்கு சிமெண்ட் கலவை, அதன் தேவையை மட்டும் நிறைவேற்றப் போதுமான அளவுடன் இருப்பதே சிறப்பு. அதைவிடக் கூடுதலாக இருப்பது செலவை அதிகப்படுத்தும் என்பதைவிடக் கட்டுவேலையின் தரத்தையும் குறைக்கும் என்பதுதான் உண்மை.

செங்கற்களைப் பிணைப்பதற்காகப் பயன்படும் சிமெண்ட் கலவை முறைப்படி நன்கு பூசப்படாமல் இருந்தால் அவ்விடங்களில் இடைவெளி ஏற்பட்டு நாளடைவில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும்.

மேலும், கட்டுவேலை கட்டிய பின்பு சிமெண்ட் கலவை தெரியும் இடங்களை அழுத்தி விடுவது பாயிண்டிங் (POINTING) என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்யப்படுவதன் மூலமாகவும் சிமெண்ட் கலவை நன்கு பூசப்பட்டு கட்டுவேலை முழுமையடைகிறது.

கட்டுவேலை - நீராற்றுதல்

கட்டுவேலை அதன் முழுமையான பலத்தை அடையும் வரை தகுந்த அளவு நீர் தெளித்து வர வேண்டும். காலை மாலை என இரண்டு வேலையும் செய்யப்படும் இந்த நீராற்றுதல் (curing) தொடர்ந்து ஏழு நாட்கள் வரை செய்யப்பட வேண்டும்.

ஒரு இடத்தில் அந்தச் சுவர் கட்டிய பின் எந்தத் தேதியில் கட்டினோம் என்று நாம் சாக்பீஸ் கொண்டு எழுதி வைப்பதன் மூலம் தகுந்த அளவு நீராற்றியுள்ளோமா என்று நாம் தெரிந்துகொள்ள இயலும்.

எந்தக் கல் நல்லது?

செங்கற்களோ ப்ளை ஆஷ் கற்களோ எவற்றை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம். அவை சரியாகத் தயாரிக்கப்பட்டு அவற்றுக்குரிய தரத்துடன் உள்ளனவா என்பதை மட்டும் நாம் பார்க்க வேண்டும். இவ்விரண்டு வகைக் கற்களும் LOAD BEARING மற்றும் FRAMED STRUCTURE, என அனைத்திலும் பயன்படுத்தலாம்.

ஏஏசி கற்கள் பாரம் கடத்தாத கட்டுவேலைக்கென்றே வடிவமைக்கப்பட்டவை. அவற்றை நாம் LOAD BEARING கட்டிடங்களில் பயன்படுத்த பொறியாளர்களிடம் முறையான செய்முறை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

- கட்டுரையாளர், கட்டுமானப் பொறியாளர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x