Last Updated : 03 Aug, 2014 09:02 AM

 

Published : 03 Aug 2014 09:02 AM
Last Updated : 03 Aug 2014 09:02 AM

ஒரு குடும்பம் இரண்டு தங்கம்

தங்க மங்கை பி.டி. உஷா தங்கப் பதக்கம் வென்றதை நினைவுகூரும் வகையில் ‘ஆவதும் பெண்ணால’ (இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது பெண்ணாலே)எனத் தொடங்கும் திரைப்படப் பாடலில் கவிஞர் வைரமுத்து பெருமை பொங்க எழுதியிருப்பார். இப்போது அப்படிப் பெருமைப்படும் மற்றுமொரு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்துள்ளது.

பெண்களுக்கான 55 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பபிதா குமாரி தங்கம் வென்று, இந்தியாவின் வெற்றி மகுடத்தின் பிரகாசத்தைக் கூட்டியிருக்கிறார். இறுதிப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த பிரிட்டானி லாவர்டுயூரை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். மல்யுத்தத்தில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் நான்காவது தங்கப் பதக்கம் இது.

தங்க மங்கைகள்

24 வயதான பபிதா குமாரி 1989-ம் ஆண்டு நவம்பர் 20 அன்று ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள பாலாலி என்னுமிடத்தில் பிறந்தார். அவருடைய சகோதரிகள் கீதா போகத், வினேஷ் போகத் ஆகியோரும் மல்யுத்த வீராங்கனைகளே. கீதா போகத் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த காமன்வெல்த் போட்டியில் வினேஷ் போகத்தும் 48 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

தந்தை சொல்லே மந்திரம்

இந்த மல்யுத்த சகோதரிகளை அவர்களுடைய தந்தை மகாவீர் சிங் விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்கப்படுத்தியுள்ளார். அவரும் முன்னாள் மல்யுத்த வீரரே. பபிதா குமாரியின் கோச்சும் அவரே என்கிறார்கள். 2000-மாவது ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட கர்ணம் மல்லேஸ்வரியின் விளையாட்டுத் திறமையைக் கண்டு வியந்த பபிதா குமாரியின் தந்தை, தன் மகள்களும் இதைப்போல் விளையாடி புகழடையவேண்டும் என விரும்பியுள்ளார்.

தொடரும் வெற்றி

இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ள பபிதா குமாரி காலிறுதியில் ஸ்காட்லாந்தின் மார்ஷ் என்பவரையும், அரையிறுதியில் இங்கிலாந்தின் போரோகோவ்ஸ்காவையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக 2010-ம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 51 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

அதேபோல் 2012-ம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கியிருந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வினேஷும் பபிதாவும் தங்கப் பதக்கம் வென்று குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x