Published : 17 Aug 2014 12:20 PM
Last Updated : 17 Aug 2014 12:20 PM

கே.எஸ்.ரவிகுமாரிடம் கற்றுக்கொண்ட பாடம்: ‘சிகரம் தொடு’ இயக்குநர் கவுரவ் பேட்டி

‘தூங்கா நகரம்’ படத்தின் இயக்குநரான கவுரவ், தற்போது விக்ரம் பிரபுவை நாயகனாக வைத்து ‘சிகரம் தொடு’ படத்தை இயக்கி வரு கிறார். ஏ.டி.எம் மோசடியை மையமாக கொண்டு எடுத்திருக்கும் இப்படத்தின் முக்கிய காட்சிகளை இமயமலையில் பட மாக்கி திரும்பியிருக்கிறார். படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருந்த அவரைச் சந்தித்தோம்.

“உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இமய மலையில் நடத்தியது மறக்கமுடியாத விஷயம். நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்த ஒரு வாரத்திலேயே உத்திர காண்டில் வெள்ளம் வந்துவிட்டது. நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடங்கள் எல்லாம் அந்த வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது. அப்படி சில இடங்கள் இருந்தது என்பதற்கு நாங்கள் எடுத்த வீடியோக்கள் மட்டும்தான் ஆதாரம்” என்று தனது இமயமலை அனுபவங்களுடன் பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் கவுரவ்.

ஏ.டி.எம் கார்டு மோசடியை முக்கிய கருவாக வைத்து இப்படத்தை இயக்கி வருகிறீர்கள். அந்த அளவுக்கு ஏடிஎம் கார்டு மோசடி பெரிய விஷயமா?

பால் கார்டு, ரேஷன் கார்டு மாதிரி இப்போது எல்லோரிடமும் ஏ.டி.எம் கார்டும் இருக்கிறது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவில் ரூ.2000 கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு வங்கியில் ஒரே வருடத்தில் 2000 மில்லியன் டாலர்கள் காணாமல் போய் இருக்கிறது. இந்த பிரச்சினையில் கொஞ்சம் காமெடி, புத்திசாலித்தனமான கண்டு பிடிப்பு ஆகியவற்றை கலந்து ‘சிகரம் தொடு’ படத்தின் திரைக்கதையை அமைத் துள்ளேன். இதில் விக்ரம் பிரபு ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதற்காக ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளை யாடு’ மாதிரி கம்பீரமான போலீஸ் அதிகாரி பாத்திரங்களை கற்பனை செய்து விடாதீர்கள். நமக்கு அடுத்த வீட்டில் இருப்பவரைப் போன்ற ஒரு சாதாரண எஸ்.ஐ.யாக நடிக்கிறார். அவர் எப்படி புத்திசாலித்தனமாக சிகரத்தைத் தொடு கிறார் என்பதுதான் கதை. அதோடு அதற்குள் அப்பா-மகன் உறவைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் எடுத்த ‘தூங்கா நகரம்’ ஒரு த்ரில்லர் கதை. ‘சிகரம் தொடு’ படமும் த்ரில்லர் வகையாகத்தான் தெரிகிறது. த்ரில்லர் படங்கள் மீது உங்களுக்கு அப்படியென்ன காதல்?

‘தூங்கா நகரம்’ முழுக்க த்ரில்லர் வகை. ஆனால் ‘சிகரம் தொடு’ ஆக்‌ஷன் காமெடி வகை. ஒரு குற்றத்தை போலீஸார் எப்படி புத்திசாலித் தனமாக புலனாய்வு செய்கிறார்கள் என்பதை இப்படத்தில் சொல்லி யிருக்கிறேன். ‘தூங்கா நகரம்’ படத்தில் எவ்வளவு சண்டைக் காட்சிகள் இருந்தாலும், இடையில் நகைச் சுவையும் இணைந்து வரும். அதே போல ‘சிகரம் தொடு’ படத்திலும் நகைச் சுவை கலந்திருக்கும்.

உங்கள் குரு கே.எஸ்.ரவிக்குமார் விரை வாக படங்களை எடுத்து முடிக்கிறார். ஆனால் நீங்கள் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதுபோல் தெரிகிறதே?

நான் கே. எஸ். ரவிகுமாரிடம் வேலை பார்த்ததால் அவரை மாதிரியே படம் எடுக்க வேண்டும் என்பதில்லை. கே. எஸ். ரவி குமார் சார் என் குரு. நான் அவரைவிட தனித்து தெரிந்தால்தான் அவருக்கு பெருமை. அவர் தன் படங்களில் கமர்ஷியல் கலந்து விறுவிறுப்பாகச் சொல் வார். ஆனால் நான் கமர்ஷியல் கதையில் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை நம்பகத்தன்மையுடன் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த படத்துக்காக நான் போலீஸாரின் உதவியுடன் ஏ.டி.எம் திருட்டுகளைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நம்பகத்தன்மை இல்லாத கதை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நேரம் செலவழித்து உழைத் துள்ளேன்.

கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து நீங்கள் எதைக் கற்றுள்ளீர்கள்?

நான் முதலில் மகராஜன் சாரிடம் வேலை பார்த்தேன். அதன் பிறகு கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் வேலைபார்த்தேன். மகராஜன் திரைக்கதையில் வல்லுநர், அவருடைய படங்களான ‘வல்லரசு’, ‘அர சாட்சி’ ஆகியவற்றின் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். கே.எஸ்.ரவிகுமாரிடம் ஒரு விஷயத்தை எப்படி ஒழுங்காக செயல்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பு களத்தில் எப்படி ஆயிரம் பேரை வைத்து வேலை வாங்க வேண்டும், பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பதை எல்லாம் ரவிகுமாரிடம் கற்றேன். ஒரு படத்தை எப்படி வடிவமைப்பது என்பதை மகராஜனிடமும் யோசித்த கதையை எப்படி திரையில் செயல்படுத்தணும் என்பதை ரவிகுமாரிடமும் கற்றேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x