

ஒரு தனியார் நிறுவனம், தனது பங்குகளின் ஒரு பகுதியை முதன் முதலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடைமுறை ஆரம்ப பங்கு வெளியீடு (ஐபிஓ) எனப்படுகிறது. தொழில் அல்லது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், கடன்களை அடைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நிதி திரட்ட ஐபிஓ வெளியிடப்படுகிறது. அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகும். இதன் மூலம் பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தில் உரிமை மற்றும் லாபத்தில் பங்கு பெற வாய்ப்பு ஏற்படுகிறது.
சமீப காலமாக ஐபிஓ வெளியிடும் நிறுவனங்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது சாமான்ய சிறு முதலீட்டாளர்களிடமும், நிறுவன முதலீட்டாளர்களிடமும் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சிறிய நிறுவனமோ அல்லது
பெரிய நிறுவனமோ ஐபிஓ என வந்துவிட்டால் முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதனால் பங்குகள் வெளியீட்டைப் போல பல மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.