

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா 114 வயதில் நவம்பர் 14 அன்று மறைந்தார். விடுதலைக்கு முந்தைய மைசூருவில் பிறந்த திம்மக்கா, சிக்கய்யாவை மணந்துகொண்டு ராம்நகரில் குடியேறினார். குழந்தைகள் இல்லாததால் தன் கணவரோடு சேர்ந்து நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் 350க்கு மேற்பட்ட ஆலமரங்களை நட்டு வளர்த்தார். அதனால், ‘மரங்களின் வரிசை’ எனப் பொருள்தரும் ‘சாலுமரத’ என்கிற பட்டப்பெயர் திம்மக்காவின் பெயரோடு ஒட்டிக்கொண்டது.
2019இல் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த மரங்கள் வெட்டப்படவிருந்த நிலையில் அன்றைய கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து, மரங்களை வெட்டக் கூடாது எனக் கோரிக்கை வைத்தார். திம்மக்காவின் அயராத செயல்பாட்டால் 70 ஆண்டுகால மரங்கள் வெட்டப்படாமல் காக்கப்பட்டன. தற்போது இவற்றின் மதிப்பு மட்டுமே ஒன்றரைக் கோடி ரூபாயைத் தாண்டும். இந்த நெடுஞ்சாலை ஆலமரங்களின் பராமரிப்புப் பணியை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.