

அன்றிலிருந்து இன்றுவரை எங்களுடையது கூட்டுக் குடும்பம்தான். பாட்டி, அம்மா, சகோதரிகள் எல்லாம் சமையலறையைப் பார்த்துகொண்டதால் நான் அந்தப் பக்கம் சென்றதே இல்லை. படித்து முடித்த உடனே வேலை கிடைத்ததால் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். சமையல் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அப்போதுதான் புரிந்தது. இன்றுபோல் அன்று யூடியூப் கிடையாது. ஒருவழியாகச் சமைக்கக் கற்றுக்கொண்டேன்.
பிறகு சொந்த ஊருக்கே மாற்றல் கிடைத்துவிட அன்றைக்குச் சமையலறைக்குள் புகுந்த நான் இன்று வரை தினமும் காய்கறி நறுக்குவது, தேங்காயைத் துருவி கூட்டு - குருமா - குழம்பு எனத் தேவைக்கேற்ப அரைப்பது, ரசப்பொடி செய்வது, துவையல் - சட்னி அரைப்பது என அலுவலகம் செல்வதற்குள் சிலவற்றை முடித்துவிடுவேன்.