

ராமேசுவரம்: நிலத்தில் மட்டுமல்ல; கடலிலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்து வருகிறார் முகம்மது நூஹ் (44) என்ற கடல் விவசாயி. ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன்வளம் அண்மைக்காலமாக குறைந்து வருவதால், மீனவர்கள் மாற்றுத் தொழில்களை நோக்கிச் செல்கின்றனர்.
இதனால் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்கவும், மிதவைகள் அமைத்து பாசிவளர்க்கவும் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (CMFRI) பயிற்சி அளித்தது. இதில் பயிற்சி பெற்ற மண்டபம் முனைக்காடு பகுதியைச் சேர்ந்த முகம்மது நூஹ் (44) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக கடலில் கூண்டு அமைத்து கோபியா மற்றும் கொடுவா மீன்களையும், மிதவைகள் அமைத்து பாசியும் வளர்த்து வருகிறார்.