

உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடு, யுனெஸ்கோ மரபுத் தலம், புவியில் உள்ள மிகவும் தனித்துவமான சூழலியல் தொகுதியான - பரந்த ஆற்றுப் பாசனப்பகுதி, கடல், ஆறுகள், சிற்றோடைகள், கடல் அலைகள் மோதும் சேற்றுப்பகுதிகள் ஆகியவை கலந்த சிக்கலான நிலப்பரப்பு மட்டுமல்ல; உலகில் புலிகள் வாழும் ஒரே அலையாத்திக் காடும் மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனம் தான்.
உலகில் மிகப் பெரிய அளவுடைய வங்கப் புலிகள் சுந்தரவனத்தில் வாழ்கின்றன. பரந்த ஆறுகளை நீந்திக் கடந்து உப்புத்தன்மை வாய்ந்த, நீர் தேங்கிய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளும் திறனுக்காகப் பெயர்பெற்றவை இங்கு வாழும் புலிகள்.