

முறுகலான தோசை ஒன்றுக்கு ஆசைப்பட்டு விமானத்தையே தவறவிட்ட ஆளைப் பற்றித் தெரியுமா? வேறு யாருமல்ல, அது நான்தான். முதல் முறையாக விமானத்தில் பறந்தபோது, 'இனிமேல் ஒவ்வொரு ஃபிளைட் டிக்கெட்டையும் பத்திரமா வெச்சுக்கணும்’ என்று முடிவெடுத்தேன். ஆனால், கணக்கிலடங்காத அளவுக்கு விமானத்தில் பறப்போம் என்றெல்லாம் அப்போது கற்பனை செய்திருக்கவில்லை. விமானம், பேருந்து, ரயில் என நான் வெற்றிகரமாக மேற்கொண்ட பயணங்களைவிட, தவறவிட்ட பயணங்கள்தான் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்துள்ளன.
எனக்குள் ஒரு வள்ளல்: சொன்னா நம்ப மாட்டீங்க, நான் ஒரு வள்ளல். கல்லூரி முடிந்து கோவையிலிருந்து பணி நேர்காணலுக்காக சென்னை வந்திருந்தேன். சென்னையில் ஒரு பிரபல எஃப்.எம்.மில் வேலையும் கிடைத்துவிட்டது. சிறுவயதிலிருந்து வியந்து பார்த்த ஊர் முழுக்க என்னுடைய குரல் ஒலிக்கப்போகிறது என்று மனதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் பார்த்திராத புதுச்சேரியிலும் என் குரல் ஒலிக்கப்போகிறது என்பது இரட்டிப்பு போனஸ்.