

பண்டிகைகளை ஆச்சி, தாத்தாக்கள் எல்லாம் `பண்டியல்’ என்பார்கள். `ஏல தீபாவளிப் பண்டியல் வருதுல்லா, சட்டைத் துணிமணி எடுத்துட்டானா உங்க அப்பா’ என்று கேட்பார் சுந்தரத்தாச்சி. அவர் அப்பாவுக்கு அத்தை. சிறு வயதிலேயே கணவனை இழந்து வீட்டோடு வந்துவிட்டார். ஆனால், அப்பா தன் அம்மாவுக்கும் மேலாகத்தான் அவரைப் பார்த்துக்கொண்டார் என்பார்கள்.
நாங்கள் விளையாட்டு மும்முரத்தில் இருக்கையில், `பேராண்டிகளா, படிக்க வேண்டாமா, பொழுதன்னிக்கும் விளையாட்டுதானா’ என்று அவர் அறிவுரை சொல்லும்போது, `உனக்கு வேற வேலையில்லை, செவனேன்னு இரேன்’ என்று நாங்கள் சொன்னால் அவர், `உங்க அப்பா நான் சொன்ன பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாம, என்னை உள்ளங்கையில வச்சுத்தான் தாங்குவான், நீங்க எடுத்தெறிஞ்சு பேசுதீங்களே’ என்பார். அவர் சட்டையை மறந்து கொள் ளைக் காலம் ஆகியிருக்கும்.
எங்க ளுக்குத் தீபாவளி, பொங்கல் பண்டியலுக்குச் சட்டைத் துணிமணி எடுக்கும் போது அவருக்கும் ஒரு சேலை எடுத்துவிடுவார் அப்பா. அதுவும் வெள்ளைச் சேலைதான். அப்பா எத்தனையோ தடவை சொல்லிவிட்டார், `நீ கலர் சேலை உடுத்திக்கோ. இப்ப எதுக்குப் பழைய சாஸ்திரமெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கே, நீ மட்டும் வெள்ளையைக் கட்டிக்கிட்டா மனசுக்கு என்னவோ போல இருக்கு அத்தை’ என்பார்.