

பெண் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். பண்பாட்டு அடிப்படையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல விஷயங்களைப் பற்றிச் சொல்லும் ‘மனு ஸ்மிருதி’யில் பெண்களைப் பற்றி உயர்வாகச் சொன்னவற்றோடு என்னைப் போன்ற நிறைய பெண்களுக்கு உறுத்தக்கூடிய விஷயங்களும் உண்டு. ‘பிதா ரக் ஷதி கௌமாரே’ எனத் தொடங்கும் பாடலில், ‘ஒரு பெண்ணைச் சிறு வயதில் அவளுடைய தந்தை பாதுகாக்கிறார். திருமணமானதும் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார், அதன் பிறகு அவளது வயோதிகப் பருவத்தில் அவளைப் பிள்ளைகள் பார்த்துக்கொள்கின்றனர்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று வரிகளைப் பற்றி எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காரணம், அப்பா, சகோதரர்களோடு வளர்ந்தவள் நான். பெண்மையை எப்படிப் போற்றி வளர்க்க வேண்டுமோ அப்படி என்னை வளர்த்தார்கள். ஒரு பெண்ணை அவள் குடும்பத்தினர் பாதுகாப்பதும், பார்த்துக்கொள்வதும், அவளது தேவைகளை நிறைவேற்றுவதும் அருமையான, அழகான விஷயங்கள். ஆனால், நான்காவதாக, ‘பெண் என்பவள் தனியாக வாழ அருகதை அற்றவள்’ என்று வரும் வரி இருக்கிறதே அதுதான் உறுத்துகிறது. பெண் என்றால் யாரையாவது சார்ந்துதான் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் பல நூற்றாண்டுகளாக நமக்குள் புதைந்துபோக இதுவும் ஒரு காரணம்.