

பெண்கள் எழுதவருவது அரிதாக இருந்த 1990களில் இருண்ட வானில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியவர் பாமா. ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்த இவர், எதுகை மோனைகளும் உவமை உவமானங்களுமே சிறந்த எழுத்து என்கிற கற்பிதத்தைத் தன் எதார்த்த எழுத்தால் முறித்துப்போட்டவர். கற்பனைகளையும் புனைவுகளையும் பின்னுக்குத் தள்ளி, மனிதர்களின் வாழ்க்கையை வார்த்தைகளாக்குவதையே தன் பாணியாகக் கொண்டவர்.
பனங்கருக்குபோல் தன்னை அறுத்தெடுத்த வாழ்க்கையைப் பள்ளிச் சிறுமிபோல் நோட்டுப் புத்தகத்தில் இவர் எழுத, அதுவே ‘கருக்கு’ என்னும் இவர் முதல் நாவலாக 1992இல் வெளியானது. தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் நாவல் என்கிற பெருமையையும் அது பெற்றது. ‘கருக்கு’ நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதோடு, கல்லூரிகளில் பாடமாகவும் இடம்பெற்றது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘கிராஸ்வேர்டு’ விருதைப் பெற்ற பிறகு சர்வதேச கவனத்தைப் பெற்றது. இவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Just One Word (Oxford University Press), The Itchy Tree Monkey and Other Stories (Speaking Tigers) ஆகிய இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.