Last Updated : 15 Jul, 2018 10:04 AM

 

Published : 15 Jul 2018 10:04 AM
Last Updated : 15 Jul 2018 10:04 AM

பக்கத்து வீடு: துறுதுறு பாட்டி

 

ளமையில் சாதிக்க முடியாதவற்றை முதுமையில் சாதித்தவர்கள் பலர். ஆனால், இளமைப் பருவத்தின் உற்சாகத்தையும் துறுதுறுப்பையும் முதுமையிலும் தொடர்கிறவர்கள் சிலரே. ஜப்பானைச் சேர்ந்த 89 வயது கிமிகோ நிஷிமோதோ அந்தச் சிலரில் ஒருவர்.

கிமிகோ பாட்டிக்கு மூன்று பேரக் குழந்தைகளும் ஆறு கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். 72 வயதில் பொழுதுபோக்காகப் படங்கள் எடுக்கத் தொடங்கினார். பின்னர், அது அன்றாடப் பணிகளுள் ஒன்றாக மாறிவிட்டது. கிமிகோவின் ஆர்வத்தைப் பார்த்த ஒரு புகைப்படப் பள்ளி, அவருக்கு முறையாகப் பயிற்சியளித்தது. ஒளிப்படக் கலையைக் கற்றதும் தன்னையே மாடலாக வைத்து படங்கள் எடுத்தார். வேடிக்கையாக அவர் எடுத்த படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு! அது தந்த உற்சாகத்தில் ஒளிப்படக் கண்காட்சியும் நடத்தியிருக்கிறார்.

தான் எடுக்கும் படங்களை போட்டோஷாப் செய்து தன் கற்பனைக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கிறார். மரங்கொத்தியுடன் பறப்பது, வண்டியில் இருந்து விழுவது, விலங்குகளைப் போன்ற தோற்றத்தில் உடையணிவது என ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கின்றன. கிமிகோவை இன்ஸ்டகிராமில் 41 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

மகிழ்ச்சியே முக்கியம்

கிமிகோவின் கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதற்குப் பிறகு தினமும் தான் எடுக்கும் படங்களைத் தன் கணவரின் ஒளிப்படத்தின் முன் காட்டுகிறார். “படம் எடுக்கும் நுணுக்கம் குறித்து நான் யோசிப்பதில்லை. நான் எடுக்கும் படங்களைப் பார்த்து மக்கள் மகிழ வேண்டும், அவ்வளவுதான். போட்டோ எடுப்பதுதான் என் மகிழ்ச்சியின் ரகசியம். நான் வாழும் காலம்வரை படம் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்கிறார் கிமிகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x