Published : 08 Jul 2018 10:47 AM
Last Updated : 08 Jul 2018 10:47 AM

வாசகர் வாசல்: பெண்களை விளிக்காத சொற்கள்

 

வி

ஞ்ஞானிகள், துறவிகள், சித்தர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான தொழில் சார்ந்த வார்த்தைகள் ஆண்களைக் குறிப்பதாகவே உள்ளன. இதில் பெண் என்ற சக உயிர் குறித்த அறிதலும் புரிதலும் தெளிவான சிந்தனையும் மதிப்பிடலும் பூஜ்ஜிய நிலையில்தான் உள்ளன. பொதுவாக, பெண்களைப் பற்றி எண்ணும்போதும் பேசும்போதும் இரண்டாம்தரமான எண்ணங்களும் பேச்சும் வெளிப்படும்.

தாய்வழிச் சமூக வாழ்க்கை முறையின் கதவு என்றைக்கு மூடப்பட்டதோ அன்றைக்கே பெண் என்ற சக உயிர் இரண்டாம்பட்சமாக்கப்பட்டுவிட்டது. இது பெண்ணுக்கு நிகழ்ந்த மாபெரும் கொடுமை.

மதங்களின் மாய வலை

உலகம் முழுவதும் உள்ள மதங்களில் பெண்கள் இரண்டாவது இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளனர். மதங்களில் உள்ள சம்பிராதாயங்கள், சடங்குகள், மூடப்பழக்கங்கள் போன்றவை பெண்களின் வாழ்வை அடிமைச் சங்கிலிகொண்டு பிணைத்துவைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட பிணையிலிருந்து பெண்கள் மீண்டுவரவே இயலாத வகையில் மதம் அவர்களைத் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

அதேபோல் மாதவிடாய் காரணமாகப் பெண்கள் பட்டபாடுகள், தொல்லைகள், அவமதிப்புகள், அவமானங்கள், அலட்சியங்கள் போன்றவற்றை வார்த்தைகளால் வடிக்க முடியாது. மாதவிடாயை இயற்கை நிகழ்வு எனப் பார்க்காமல் இந்தக் காலத்திலும் பெண்களை அந்த நாட்களில் ஒதுக்கிவைக்கும் அவலங்கள் நடக்கின்றன.

சிவந்த நிறம், பெரிய கண்கள், கூரிய மூக்கு, வரிசையான பற்கள் போன்ற அம்சங்கள் இல்லாத பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் திருமணம் ஆவதில்லை. ஆனால், ஆண்களுக்குப் புற அழகு தேவைப்படுவதில்லை. அவர்கள் திருமணம் செய்துகொள்ள ‘ஆண்’ என்பதே போதுமானதாக இருக்கிறது. ஆண்கள் மட்டும் ஏன் அழகான பெண்களே மனைவியாக வரவேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கின்றனர்?

- பாரதி, எட்டயபுரம்.

அம்மாவுக்கு யாரைப் பிடிக்கும்?

மு

துகலைப் படிப்பு முடித்துவிட்டு பெற்றோருக்கு உதவியாக எங்கள் கடையைக் கவனித்துவருகிறேன். ஒரு நாள் கடையைச் சுத்தம் செய்துவிட்டு மிகுந்த பசியுடன் வீட்டுக்குச் சென்றேன். அம்மா எனக்குச் சோறு போட்டு ஒரு துண்டு மீனையும் என் அண்ணனுக்காக இரண்டு துண்டு மீனையும் எடுத்து வைத்திருந்தார்கள். எனக்கு சாதம் போட்ட பிறகு, “ஆம்பள பிள்ளை. மீனுன்னா விரும்பிச் சாப்பிடுவான்” என்று அம்மா சொன்னார்.

எனக்கு இந்த விஷயம் நெருடலாக இருந்தது. நம் அண்ணன்தானே சாப்பிடட்டும் என்று ஏற்ற என்னுடைய மனத்தால் ‘ஆண் பிள்ளை’ என அம்மா சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் பாலின வேறுபாட்டை எப்படி ஏற்பது? தன் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் நிறைவான கல்வியைக் கொடுக்க நினைக்கும் பெற்றோர்கள்கூடச் சிறு சிறு விஷயங்களில் இப்படிப் பிரித்துப் பேசுவது ஏன்? தாயின் மனம் ஆண் குழந்தை மீது ஈர்ப்புடனும் பற்றுடனும் இருப்பது, அவர்களே அறியாமல் இச்சமூகத்தால் கற்பிக்கபட்டதன் விளைவா எனத் தெரியவில்லை. வீட்டில் சமத்துவத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தில் அத்தகைய பெரும் மாற்றத்தை எப்படி ஏற்படுத்த முடியும்?

- ரா.ரேகா, பெரியபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x