Published : 15 Jul 2018 10:04 AM
Last Updated : 15 Jul 2018 10:04 AM
கை
வினைக் கலையை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு கலைநயத்துடன் கற்பனையையும் கலந்து புதுப்புது கலைப் படைப்புகளை உருவாக்கிவருகிறார் இந்துபாலா.
சென்னை பழவந்தாங்கல் பகுதியில் பலருக்கும் அறிமுகமானவர் இவர். சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம்கொண்ட இந்துபாலா, தன் அம்மா கைவினைப் பொருட்கள் செய்வதைப் பார்த்துத் தானும் அதைக் கற்றுக்கொண்டார். தனக்கெனத் தனி அடையாளத்தைக் கைவினைக் கலை மூலமே இவர் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். யாரையும் எதிர்பார்க்காமல் வாழவும் இது உதவுவதாகச் சொல்கிறார்.
பத்து ஆண்டுகளாகக் கைவினைப் பொருட்களைச் செய்துவரும் இவர், திருமண நிகழ்வுக்கான பிரத்யேக அலங்காரப் பொருட்களையும் செய்கிறார். குங்குமச் சிமிழ், அலங்கார சீர்வரிசைத் தட்டுகள், பூஜையறையில் ஒட்டும் பிளாஸ்டிக் வில்லைகள் என ஒவ்வொன்றையும் கலை நயத்துடன் செய்கிறார்.
அதுவே இவருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளது. வீட்டு விசேஷங்களின்போது அணிந்துகொள்ளக்கூடிய ஆபரணங்கள் இவரது மற்றுமொரு சிறப்பு. இவை போதாதெனத் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்வதையும் தொழிலாகக் கொண்டுள்ளார்.
திருமணத்துக்குப் பின் குடும்பமே உலகம் என்று பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிவிடாமல் தங்களுக்கென ஒரு அடையாளத்தை அமைத்துக்கொள்ளத் தானே உதாரணம் என்று இந்துபாலா சொல்கிறார். “வாழ்க்கையில எவ்வளவோ சிரமங்கள் ஏற்பட்டாலும் ஒரு பெண் நினைச்சா அதையெல்லாம் உடைத்துவிட்டு முன்னேறலாம்” என்கிறார் இந்துபாலா நம்பிக்கை மிளிர.
- எஸ். ரம்யா படங்கள்: ஏ.பி. பார்கவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT